புது தில்லி: உலக பயங்கரவாத அமைப்பான அல்-கய்தாவின் தலைவர், கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களுக்குள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் குறித்து பேசும் விடியோ வெளியாகியுள்ளது.
இந்தியாவில் வாழும் முஸ்லிம் மக்கள் இதற்கு தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்குமாறு அந்த விடியோவில் அவர் கூறியுள்ளார்.
அல்-கய்தா தலைவர் ஐமான் அல்-ஸவாஹிரி பேசியிருக்கும் 9 நிமிட விடியோ அல்-கய்தாவின் அதிகாரப்பூர்வ ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் உண்மைத் தன்மையை மத்திய புலனாய்வுத் துறையும் உறுதி செய்துள்ளது.
இதையும் படிக்கலாம்.. பிரிட்டனில் 11 வயதில் உறங்கி, 21 வயதில் விழித்தவர்: நம்பமுடியவில்லையா?
ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட பிறகு அல்-கய்தாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் ஸவாஹிரி, கர்நாடக கல்லூரியில் தன்னை ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமெழுப்பிக் கொண்டே சூழ்ந்த கும்பலை, அல்லா அக்பர் என்று கோஷமெழுப்பிக் கொண்டே கடந்து சென்ற மாணவி முஸ்கான் கானை புகழ்ந்து பேசியிருக்கிறார்.
முஸ்கானை இந்தியாவின் உன்னத பெண் என்று குறிப்பிடும் அவர், அப்பெண் குறித்து தான் எழுதிய கவிதையையும் வாசித்துள்ளார்.
பிறகு, ஹிஜாப்பை தடை செய்யும் பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகள், மேற்குலக நாடுகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளன என்றும் சாடியுள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டே ஸவாஹிரி உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வந்தன. ஆனால், அவர் பேசிய சில விடியோக்கள் பிறகு வெளியானது. அவர் ஆப்கானிஸ்தானின் ஏதோ ஒரு பகுதியில் வாழந்து வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடைசியாக அவர் 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையை சாடி ஒரு விடியோ வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.