உக்ரைன் போரில் தங்கள் தரப்பிலும் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரஷிய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் ஒரு மாதத்தைக் கடந்து நடைபெற்று வருகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்துவந்த ரஷியா, பல எச்சரிக்கை விடுத்தும் கேட்காததால் இறுதியாக உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது.
உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி அழித்துள்ள ரஷியாவிடம் உக்ரைனும் திறம்பட போரிட்டு வருகிறது. எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி ரஷிய எல்லையில் உள்ள சேமிப்புக் கிடங்களின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த போரில் ரஷியத் தரப்பிலும் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளதை ரஷிய அரசின்(கிரெம்ளின்) செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் ஒப்புக்கொண்டுள்ளார்.
ரஷிய வீரர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்த அவர், 'இது எங்களுக்கு ஒரு பெரிய துயரம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே உக்ரைன் தாக்குதலால் ரஷியா மீது அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் கடும் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் ரஷியாவுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. புச்சா படுகொலையைக் கண்டித்து ஐ. நா. மனித உரிமைகளை கவுன்சிலில் இருந்தும் ரஷியா நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷியத் தரப்பிலும் வீரர்கள் அதிகம் உயிரிழந்துள்ளதாக ரஷியா ஒப்புக்கொண்டுள்ளது.