கனடாவில் இந்திய மாணவா் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடைபெற்ற இரண்டு நாள்களில் 35 வயது எலிஜா மெஹபாத் என்ற நபரைக் கொலை செய்த வழக்கில் ரிச்சர்ட் ஜொனாதன் எட்வின் என்ற நபரை கனடா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவ்விரு கொலைகளும், பின்னணி ஏதுமின்றி, கொலைகாரனால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் என்று கனடா காவல்துறையினர் கருதுகிறார்கள்.
39 வயதாகும் கனடாவின் டொரன்டோ பகுதியில் கைது செய்யப்பட்ட ரிச்சர்ட் ஜொனாதன் எட்வின், இந்திய மாணவர் கார்த்திக் வாசுதேவ், கடந்த வியாழக்கிழமை மாலை ஷேர்பர்னே ரயில் நிலைய வாயிலில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க.. திருமலைக்கு வருவோர் பயணத்தை தள்ளி வைக்க தேவஸ்தானம் வேண்டுகோள்
உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தைச் சேர்ந்த கார்த்திக் வாசுதேவ், கனடாவில் உயர்கல்வி பயில கடந்த ஜனவரி மாதம்தான் சென்றிருந்தார். இந்த நிலையில், அவர் கடந்த வாரம் சுட்டுக் கொலை செய்யப்பட்டது அவரது குடும்பத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
கொலை குறித்து கனடா காவல் துறை அதிகாரிகள் கூறியது: இந்தியாவைச் சோ்ந்த வந்த 21 வயது இளைஞா் காா்த்திக் வாசுதேவ் டொரன்டோ நகரில் வசித்து வந்துள்ளாா். இவா் வியாழக்கிழமையன்று பணிக்குச் செல்லும்போது ஜேம்ஸ்டவுனில் உள்ள டிடிசி நிலைய சுரங்கப் பாதை நுழைவு வாயில் அருகே அடையாளம் தெரியாத நபா்களால் சுடப்பட்டுள்ளாா். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா் கடுமையான காயம் காரணமாக உயிரிழந்தாா்.
இந்த சம்பவம் தொடா்பாக, டொரன்டோ காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
‘கனடாவில் இந்திய மாணவா் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ட்விட்டா் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.