பாகிஸ்தானின் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றுக் கொண்ட நிகழ்வில் அதிபர் ஆரிஃப் ஆல்பி பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம் மீது ஏப்ரல் 10ஆம் தேதி நள்ளிரவு நடத்தப்பட்ட வாக்கெடுப்பு வெற்றி பெற்றதையடுத்து, அவரது தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
இதனைத் தொடர்ந்து, புதிய பிரதமராக முஸ்லிம் லீக் (என்) கட்சித் தலைவரும் எதிா்க்கட்சித் தலைவருமான ஷாபாஸ் ஷெரீஃபை எதிர்க்கட்சிகள் தேர்வு செய்தது.
இந்நிலையில், அனைத்து எதிர்க்கட்சிகளும் இடம்பெறும் வகையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவானது திங்கள்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், உடல்நலக் குறைவு காரணமாக பதவியேற்பு விழாவில் பங்கேற்று அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று அதிபர் ஆரிஃப் தெரிவித்ததை தொடர்ந்து நேற்றைய நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து, பாகிஸ்தான் நாடாளுமன்ற அவைத் தலைவர் சாதிக் சஞ்ரணி புதிய அமைச்சர்களுக்கு இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னதாக, கடந்த வாரம் நடைபெற்ற பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் பதவியேற்பு விழாவிலும் அதிபர் ஆரிஃப் ஆல்பி கலந்து கொள்ளாதது குறிப்பிடத்தக்கது.