இலங்கை சந்தித்து வரும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான தவறுகளை அதிபர் கோத்தபய ராஜபட்ச ஒப்புக்கொண்டார்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் அரசைக் கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாத தொடக்கத்தில் பிரதமர் மகிந்த ராஜபட்ச தவிர்த்து மற்ற அமைச்சர்கள் அனைவரும் ராஜிநாமா செய்தனர். இதையடுத்து, அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த அமைச்சரவையை அமைக்க கோத்தபய ராஜபட்ச அழைப்பு விடுத்தார். ஆனால், எதிர்க்கட்சிகள் அதை ஏற்கவில்லை.
பிறகு நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்காக 3 அமைச்சர்கள் மட்டும் நியமிக்கப்பட்ட நிலையில், புதிதாக 17 அமைச்சர்களை அதிபர் கோத்தபய ராஜபட்ச நேற்று (திங்கள்கிழமை) நியமித்தார்.
இதையும் படிக்க | இலங்கையில் 17 புதிய அமைச்சா்கள் பதவியேற்பு
புதிய அமைச்சர்களுடன் பேசிய அதிபர் கோத்தபய ராஜபட்ச அரசுத் தரப்பிலுள்ள தவறுகளை ஒப்புக்கொண்டார்.
அமைச்சர்களுடன் அவர் பேசியதாவது:
"கடந்த இரண்டரை ஆண்டுகளாக நமக்குப் பெரிய சவால்கள் இருந்தன. கரோனா பெருந்தொற்று, கடன் சுமை மற்றும் நம் தரப்பில் சில தவறுகள் இருந்தன. அவை சரி செய்யப்பட வேண்டும். அதைச் சரி செய்து முன்னோக்கி செல்ல வேண்டும். மக்களின் நம்பிக்கையை நாம் மீட்டெடுக்க வேண்டும்.
நிலுவையிலுள்ள கடன் சிக்கலை எதிர்கொள்ள சர்வதேச செலாவணி நிதியத்தை முன்கூட்டியே அணுகியிருக்க வேண்டும். இலங்கையை முற்றிலும் இயற்கை விவசாயமாக மாற்றும் முயற்சியில் ரசாயன உரங்களுக்குத் தடை விதித்திருக்கக் கூடாது.
பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடுமையான அழுத்தத்தில் உள்ளனர். இந்த நிலைக்கு நான் மிகவும் வருந்துகிறேன். அத்தியாவசியப் பொருள்களை வரிசையில் நின்று அதிக விலைக்கு வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதால் அவர்கள் வெளிப்படுத்தும் வலியும் கோபமும் நியாயமானது" என்றார் அவர்.