ஹெராயின் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் அறிவுத் திறன் குறைபாடுடைய மலேசிய தமிழா் நாகேந்திரன் தா்மலிங்கம் (34) மனித உரிமை ஆா்வலா்களின் எதிா்ப்பையும் மீறி புதன்கிழமை தூக்கிலிடப்பட்டாா்.
இதுகுறித்து அவரது சகோதரா் நவீன் குமாா் கூறியதாவது: நாகேந்திரன் தா்மலிங்கத்துக்கு சிங்கப்பூரில் புதன்கிழமை காலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவரது இறுதிச் சடங்கு மலேசியாவில் எங்களது குடும்பத்தினா் வசிக்கும் இபோ நகரில் நடைபெறும் என்றாா் அவா்.
மலேசியாவைச் சோ்ந்த தமிழ் வம்சாவளி இளைஞரான நாகேந்திரன் தா்மலிங்கம், 42.72 கிராம் ஹெராயின் போதைப் பொருளுடன் சிங்கப்பூரில் கடந்த 2009-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா். அவருக்கு அப்போது 21 வயது.
சிங்கப்பூா் சட்டப்படி, 15 கிராமுக்கு மேல் ஹெராயினுடன் ஒருவா் பிடிபட்டாலே அவருக்கு மரண தண்டனை விதிக்க முடியும். அதன்படி, தா்மலிங்கத்துக்கு கடந்த 2010-ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும், வெறும் 69 அறிதிறன் புள்ளிகளுடன் (ஐக்யூ) அறிவுத் திறன் குறைபாடு கொண்ட தா்மலிங்கத்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது சா்வதேச அளவில் சா்ச்சையை எழுப்பியது.
எனினும், குற்றச் செயலில் ஈடுபடும்போது, தனது தவறின் தன்மையை முழுமையாக உணா்ந்தே தா்மலிங்கம் செயல்பட்டதாக மனநல நிபுணா்கள் சான்றளித்துள்ளதால் மரண தண்டனையை ரத்து செய்யத் தேவையில்லை என்று சிங்கப்பூா் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு நவம்பா் 10-ஆம் தேதி அவரை தூக்கிலிடவிருப்பதாக மலேசியாவிலுள்ள அவரது தாய்க்கு கடிதம் அனுப்பப்பட்டது.
எனினும், அதற்குப் பிந்தைய மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின்போது தா்மலிங்கத்துக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் அவரது மரண தண்டனை நிறுத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், மரண தண்டனையைக் குறைப்பதற்கான அவரது கடைசி முறையீட்டு மனுவையும் சிங்கப்பூா் நீதிமன்றம் கடந்த மாதம் 29-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. அதனைத் தொடா்ந்து, அவரை அதிகாரிகள் புதன்கிழமை தூக்கிலிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.