
கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபா் கோத்தபய ராஜபட்சவின் நுழைவு இசைவை (விசா) மேலும் 2 வாரங்களுக்கு சிங்கப்பூரில் தங்க அனுமதிக்குமாறு சிங்கப்பூா் அதிகாரிகளிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக உள்ளூர் செய்தி ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அந்நாட்டு அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்ச ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதன் காரணமாக கடந்த ஜூலை 13-ஆம் தேதி கோத்தபய ராஜபட்ச மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றாா். அதைத் தொடா்ந்து ஜூலை 14-ஆம் தேதி அவா் உள்ள சாங்கி விமான நிலையத்திற்கு சென்றாா்.
அங்கிருந்து தனது அதிபா் பதவியை ராஜிநாமா செய்வதாக இலங்கை நாடாளுமன்ற அவைத் தலைவருக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பினாா்.
இதையடுத்து முன்னாள் அதிபர் கோத்தபயவுக்கு 14 நாள்கள் பயண அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, இரண்டு வாரங்கள் அங்கு தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டார்.
தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள கோத்தபய ராஜபட்சவின் விசா ஆகஸ்ட் 11 ஆம் தேதியிடன் முடிவடைவதால், ஆகஸ்ட் 11ஆம் தேதி நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதையும் படிக்க | தென் கொரியா: முதல்முறையாக நிலவுக்கு விண்கலம்
இந்நிலையில், சிங்கப்பூரில் தங்கியுள்ள இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபயவுக்கு வழங்கப்பட்டிருந்த விசாவை மேலும் 14 நாள்களுக்கு நீடிக்குமாறு இலங்கை அரசு சிங்கப்பூர் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இணங்க ‘கோத்தபயவுக்கு வழங்கப்பட்டிருந்த விசா காலம் மேலும் 14 நாள்களுக்கு சிங்கப்பூா் அரசு நீட்டித்துள்ளது’ என்றும், கோத்தபய மேலும் இரண்டு வாரம் சிங்கப்பூரில் தங்கியிருப்பார் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.