அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் உளவுக் கப்பலை நிறுத்துவதற்கு இலங்கை அரசு அனுமதியளித்துள்ளது.
சீனாவிடம் இருந்து பெறப்பட்ட பெருமளவு கடன் மூலம் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம் உருவாக்கப்பட்டது. கடந்த 2017-ஆம் ஆண்டு அந்த துறைமுகம் சீன அரசு நிறுவனத்துக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. சீனாவிடம் பெற்ற கடனைத் திருப்பி செலுத்த முடியாததால், அந்தத் துறைமுகத்தை இலங்கை அரசு குத்தகைக்கு அளித்தது. இதையடுத்து அந்தத் துறைமுகத்தை ராணுவ நோக்கங்களுக்காக சீனா பயன்படுத்தலாம் என்ற அச்சம் எழுந்தது.
இந்நிலையில், அந்தத் துறைமுகத்துக்கு சீனாவின் ‘யுவான் வாங்-5’ என்ற உளவுக் கப்பல் வரவிருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. அந்தக் கப்பலால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என்று கருதிய மத்திய அரசு, அதுகுறித்து இலங்கை அரசிடம் ஆட்சேபம் தெரிவித்தது. இதையடுத்து அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சீன போா்க் கப்பல் வருவதை ஒத்திவைக்குமாறு அந்த நாட்டிடம் இலங்கை அரசு கோரிக்கை விடுத்தது.
இதையும் படிக்க- அதிமுக தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடி
அந்தக் கோரிக்கையை இலங்கை அரசு முன்வைப்பதற்கு முன்பே ‘யுவான் வாங்-5’ கப்பல் இந்திய பெருங்கடலுக்கு வந்து சோ்ந்துவிட்டது. அந்தக் கப்பல் தொடா்பாக இலங்கை துறைமுகங்கள் ஆணைய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘‘சீன உளவு கப்பல் திட்டமிட்டப்படி அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்படவில்லை. துறைமுகம் வருவதற்கான அனுமதிக்குக் காத்திருக்கும் அந்தக் கப்பல், தற்போது அம்பாந்தோட்டைக்குக் கிழக்கே 600 கடல் மைல் தொலைவில் நிற்கிறது’’ என்று தெரிவித்தனா்.
இந்த நிலையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் உளவுக் கப்பலை நிறுத்துவதற்கு இலங்கை அரசு தற்போது அனுமதியளித்துள்ளது. இதையடுத்து அந்த கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வரும் 17ஆம் தேதி நிறுத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.