தங்களது சுதந்திர நாளையொட்டி ரஷியா தங்கள் மீது புதன்கிழமை (ஆக. 24) தாக்குதல் நடத்தினால், அதற்கான பதிலடி மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று எச்சரித்திருந்த நிலையில், கிழக்கு உக்ரைனில் உள்ள ரயில் நிலையத்தில் ரஷியப் படைகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் இறந்ததாக ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
நேட்டோவில் இணைவதற்கு ஸெலென்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அரசு தொடா்ந்து ஆா்வம் காட்டி வந்ததையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி படையெடுத்தது.
அந்தப் படையெடுப்பின் ஒரு பகுதியாக, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் தங்களது ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகள் போக, இன்னும் அரசுப் படையினா் வசமிருக்கும் பகுதிகளைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு ரஷியா கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது.
புதன்கிழமையுடன் (ஆக. 24) ரஷியப் படையெடுப்பு நடந்து 6 மாதங்கள் நிறைவடைகிறது. அதே நாளில் சோவியத் யூனியலிருந்து பிரிந்ததை சுதந்திர நாளாக உக்ரைன் கொண்டாடுகிறது.
அந்த நாளில், உக்ரைனின் அரசுக் கட்டடங்கள் உள்ளிட்ட முக்கிய நிலைகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதையும் படிக்க | உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில்சேவை: ஜொ்மனியில் தொடக்கம்
இந்தச் சூழலில், அத்தகைய தாக்குதல்களுக்கு சக்திவாய்ந்த பதிலடி கொடுக்கப்படும் என்று அதிபா் வொலோதீா் ஸெலென்ஸ்கி எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், சுதந்திர நாளில் கிழக்கு உக்ரைனில் டினிப்ரொபெட்ரோவ்ஸ்க் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் ரஷியப் படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 வயது குழந்தை உள்பட 22 பேர் கொல்லப்பட்டதாகவும், குறைந்தது 50 பேர் காயமடைந்தனர் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விடியோ பதிவு ஒன்றின் மூலம் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
சுமார் 3,500 பேர் வசிக்கும் டினிப்ரொபெட்ரோவ்ஸ்க் நகரில் உக்ரைனின் சுதந்திர நாளில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.