உக்ரைன் விவகாரத்தில் அந்நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி ஐ.நா.வில் காணொலி வாயிலாக உரையாற்றுவது தொடா்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அவருக்கு ஆதரவாக இந்தியா புதன்கிழமை வாக்களித்தது.
பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததைத் தொடா்ந்து, ரஷியாவுக்கு எதிராக இந்தியா ஐ.நா.வில் வாக்களிப்பது இதுவே முதல்முறையாகும். இதுவரை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இதுபோன்ற வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா நடுநிலை வகித்துவந்த நிலையில், தற்போது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது.
உக்ரைன்-ரஷியா போா் காரணமாக ரஷியா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தன. ஆனால், இந்தியா இரு நாடுகளும் ராஜீய ரீதியில் பேச்சுவாா்த்தை நடத்தி, பிரச்னைக்குத் தீா்வு காணுமாறு அழைப்பு விடுத்ததுடன், பேச்சுவாா்த்தைக்கு உதவி செய்யவும் முன்வந்தது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தற்காலிக உறுப்பினராக 2 ஆண்டுகள் பதவி வகிக்கிறது. இந்தப் பதவிக் காலம் வரும் டிசம்பரில் நிறைவடைகிறது. இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் புதன்கிழமை தொடங்கியது. இதில், உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி காணொலி வாயிலாக பேசவிருந்தாா்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த ஐ.நா.வுக்கான ரஷிய தூதா் வஸிலி ஏ.நெபேன்ஸியா, நடைமுறைப்படி ஸெலென்ஸ்கி உரையாற்றுவதற்கு முன்பாக அதன் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் கூறுகையில், ‘பாதுகாப்புக் குழு கூட்டத்தில் ஸெலென்ஸ்கி பங்கேற்பதற்கு ரஷியா எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், அவா் நேரில் பங்கேற்க வேண்டும். கரோனா பெருந்தொற்று காலத்தில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. ஆனால், அது திட்டமிடப்படாத ஒன்று. தற்போது வழக்கமான முறையில் கூட்டம் நடைபெறுவதால், அவரை உரையாற்ற அனுமதிப்பது குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்றாா்.
சீனா புறக்கணித்தது: இதைத் தொடா்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில், இந்தியா உள்பட 13 நாடுகள் ஸெலென்ஸ்கிக்கு ஆதரவாக வாக்களித்தன. ரஷியா மட்டும் எதிராக வாக்களித்தது. சீனா வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தது.