அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள கல்லூரியில் செவ்வாய்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச்சூடு காரணமாக இரண்டு காவல்துறை அலுவலர்கள் கொல்லப்பட்டனர். அதேபோல, மினசோட்டா உள்ள பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு காரணமாக ஒரு மாணவர் கொல்லப்பட்டார். ஒருவர் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து விர்ஜினியா காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், "கல்லூரி வளாகத்தின் சட்ட அமலாக்க அலுவலர் ஒருவரும் பாதுகாப்பு அலுவலர் ஒருவரும் கொல்லப்பட்டனர். பின்னர், சுட்டவர் சம்பவ இடத்திலிருந்து தப்பித்து ஓடிவிட்டார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூட்டுக்கு பிறகு, மதியம் 1:20 மணி அளவில் பல்வேறு சட்ட அமலாக்க முகமைகளைச் சேர்ந்த அலுவலர்கள் பிரிட்ஜ்வாட்டர் கல்லூரிக்கு விரைந்தனர் என பள்ளி நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்தது.
குற்றம்சாட்டப்பட்டவர் குறித்து விர்ஜினியா காவல்துறை கூறுகையில், "சந்தேகத்திற்குள்ளான 27 வயதான அலெக்சாண்டர் வியாட் காம்ப்பெல் பின்னர் கைது செய்யப்பட்டார். அவருக்கும் குண்டு அடி பட்டுள்ளது. ஆனால், உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை.
அவரை காவல்துறையினர் சுட்டனரா அல்லது தானாக காயத்தை ஏற்படுத்தி கொண்டாரா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிக்க| ஆட்சிக் கவிழ்ப்பு ஆண்டு தினம்: மியான்மரில் திரும்புமா அமைதி?
அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனுக்கு தெற்கே இரண்டரை மணி தூரத்தில் அமைந்துள்ளது பிரிட்ஜ்வாட்டர் நகரம். மதியம் 1:30 மணி அளவில்தான் துப்பாக்குச்சூடு நடைபெற்றதாக எச்சரிக்கையே விடுத்ததாக உள்ளூர் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அனைத்தும் சரி செய்யப்பட்டுவிட்டதாக 4:30 மணி அளவில் பள்ளியின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டது.
இதுகுறித்து கேசி ட்ரஸ்லோ என்ற மாணவர் வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "வகுப்பறை கட்டிடத்தின் ஜன்னலுக்கு வெளியே துப்பாக்கிச் சத்தம் கேட்டது. இரண்டாவது துப்பாக்கி சத்தத்திற்கு பிறகு, நாங்கள் மாடிக்கு ஏறினோம். நாங்கள் ஒரு மணி நேரம் மாடியில்தான் இருந்தோம்" என்றார்.