உக்ரைனின் தலைநகரில் கிவ்வில் ரஷியப் படைகள் நுழைந்துள்ளதைத் தொடர்ந்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாகாண மேயர் அறிவித்துள்ளார்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில் கடந்த சில தினங்களாக இருநாட்டின் எல்லை பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வந்தது. அதனைத் தொடர்ந்து உக்ரைன் நாட்டின் எல்லைப் பகுதியில் ரஷியா தனது படைகளை குவித்துள்ளதாக அமெரிக்கா குற்றச்சாட்டை எழுப்பியது.
இதையும் படிக்க | 74 உக்ரைன் ராணுவத் தளவாடங்கள் அழிப்பு: ரஷியா
இந்நிலையில் இன்று காலை உக்ரைன் மீது போர் தொடுப்பதாக ரஷிய அதிபர் விளாதிமிர் புடின் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து ரஷியப் படைகள் கிழக்கு உக்ரைன் வழியாக அந்நாட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கிவ்விற்குள் நுழைந்துள்ள ரஷியப் படைகள் தொடர்ந்து தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் அவசர நடவடிக்கையாக கிவ்வில் ஊரடங்கு அறிவிக்கப்படுவதாக அம்மாகாண மேயர் விட்டலி கிளிட்ச்கோ அறிவித்துள்ளார். மேலும் நிர்வாகம், இராணுவ கட்டளை மற்றும் சட்ட அமலாக்கம் ஆகியவற்றின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும் உக்ரைன் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.