உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்திய மக்கள் அனைவரும் இருக்கும் இடத்திலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என உக்ரைனுக்கான இந்தியத் தூதர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
"உக்ரைனில் நிலைமை மிகவும் பதற்றமாக இருப்பதால், நிறைய பயத்தை உண்டாக்குகிறது. வான்வழிப் போக்குவரது நிறுத்தப்பட்டது. ரயில் நேரங்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே உள்ளன. சாலைகள் நிரம்பி வழிகின்றன. அனைவரும் பொறுமை காத்து இந்த சூழலை துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். தூதரகம் கீவ்வில் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருக்கும்.
இதையும் படிக்க | ராணுவத்தினர் 40 பேர், மக்கள் 10 பேர் பலி: உக்ரைன் அதிபர்
இந்த சூழலில் இரண்டு ஆலோசகர்களை நியமித்துள்ளோம். நீங்கள் இருக்கும் இடங்களில், நன்கு அறிமுகமுள்ள இடங்களிலேயே இருக்குமாறு வலியுறுத்துகிறேன். பயணத்தில் இருப்பவர்கள் உங்களுக்குப் பழக்கமுடைய இருப்பிடத்துக்குத் திரும்புங்கள். கீவ்வில் உள்ளவர்கள் உங்களது நண்பர்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுடன் தொடர்பிலேயே இருங்கள். அதன்மூலம் தற்காலிகமாக தஞ்சமடையலாம். இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்களால் முடிந்தளவிலான உதவிகளைச் செய்யுமாறு அவர்களை ஏற்கெனவே தொடர்புகொண்டு வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஏதேனும் அவசர நிலை இருந்தால், கொடுக்கப்பட்டுள்ள அவசர எண்களைத் தொடர்புகொள்ளுங்கள். நாங்கள் வெளியிடும் அறிவிப்புகளுக்காக சமூக ஊடக தளங்களைத் தொடர்ந்து பின்பற்றுங்கள்.
தற்போதைய நிலையில், இந்தக் கடினமான சூழலுக்கான தீர்வைக் கண்டறிய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் இந்தியத் தூதரகம் முயற்சித்து வருகிறது. கூடுதல் தகவல்களுடன் மீண்டும் வருகிறேன்."