உக்ரைன் மீது போர் தொடுத்ததன் காரணமாக ஐரோப்பிய கவுன்சிலில் இருந்து ரஷியாவின் பிரதிநிதித்துவ உரிமைகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஐரோப்பிய கவுன்சில் தெரிவித்துள்ளது. இடைநீக்கம் என்பது இறுதி நடவடிக்கை அல்ல, தற்காலிகமான ஒன்றுதான் என்று தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது மூன்றாவது நாளாக ரஷிய படைகள் பயங்கர தாக்குதலை நடத்தி வருகின்றன. பல திசைகளில் இருந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷிய படைகள், தலைநகர் கீவ் நோக்கி முன்னேறி வருகிறது. ரஷியாவின் இந்த நடவடிக்கைக்கு ஐரோப்பிய கவுன்சிலும், நேட்டோ கூட்டமைப்பும் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.
பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷியா மீது கடும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
இந்நிலையில், ஐரோப்பிய கவுன்சிலில் இருந்து ரஷியாவை அந்த அமைப்பு இடைநீக்கம் செய்துள்ளது.
உக்ரைன், போலாந்து கொண்டு வந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தி ரஷியாவின் உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய கவுன்சிலில் பிரதிநிதித்துவத்துக்கான உரிமை என்ற அடிப்படையில் ரஷியா உறுப்பினராக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு உக்ரைனில் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள லுகான்ஸ்க் மற்றும் டன்ஸ்ட்க் பிராந்தியங்களை தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பதாக தெரிவித்தார். இரண்டு பகுதிகளையும் அங்கீகரித்த சில நாள்களுக்குப் பின்னர், புதின் வியாழக்கிழமை ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உத்தரவிட்டார். அண்டை நாட்டை ஆக்கிரமிக்கும் திட்டம் ரஷியாவிடம் இல்லை என்று கூறினார்.
உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, ரஷியா ஒரு பொம்மை அரசாங்கத்தை நிறுவ முயற்சிப்பதாக குற்றம் சாட்டியதுடன், உக்ரைனியர்கள் ரஷிய ஆக்கிரமிப்புக்கு எதிராக தங்கள் நாட்டைப் பாதுகாப்பார்கள். நாட்டின் சுதந்திரத்திற்காக தொடர்ந்து நாங்கள் ஒன்றிணைந்து போராடுவோம் என்றார்.
இதையும் படிக்க | புதின், செர்ஜி லாவ்ரோ சொத்துக்களை முடக்க அமெரிக்கா முடிவு