
இலங்கையில் அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலக வலியுறுத்தி மாபெரும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த நாட்டில் எரிபொருள் விநியோகத்தை இரு நாள்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் நிறுத்தி உள்ளது.
இது குறித்து அந்த நிறுவனத்தின் இலங்கை துணை நிறுவனமான லங்கா இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (எல்ஐஓசி) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இலங்கையில் போராட்டங்கள் நடத்த பல்வேறு அமைப்புகள் திட்டமிட்டுள்ளதன் காரணமாக, விற்பனையகங்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்வதை இரு நாள்களுக்கு நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் (ஜூலை 8, 9) எரிபொருள் விநியோகம் செய்யப்படாது. எனினும், திரிகோணமலையிலிருந்து இலங்கை அரசின் சிலோன் பெட்ரோலியம் காா்ப்பரேனுக்கு (சிபிசி) எரிபொருள் வழக்கம்போல் விநியோகிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் அந்நிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக, அரசின் சிபிசி நிறுவனத்தால் எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு, நாடு முழுவதும் உள்ள அதன் விற்பனையகங்கள் கடந்த மாதம் 27-ஆம் தேதியிலிருந்து மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், எல்ஐஓசி நிறுவனத்தின் விற்பனையகங்கள் மட்டுமே பெட்ரோல் மற்றும் டீசலை விற்பனை செய்துவந்தன.
அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலக வலியுறுத்தி நடத்தப்படும் போராட்டம் காரணமாக, இரு நாள்களுக்கு எரிபொருள் விநியோகத்தை நிறுவனம் நிறுத்திவைத்துள்ளது.