ஸ்பெயினில் மேலும் 12 பேருக்கு குரங்கு அம்மை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் முதன்முதலில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை தொற்று, பின்னர் அமெரிக்கா, கனடா, ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் ஆஸ்திரேலியா உள்பட 17 நாடுகளில் பதிவாகியுள்ளது.
பிரிட்டனைத் தொடர்ந்து குரங்கு அம்மை பாதிப்பில் ஸ்பெயின் அதிகளவில் பாதிப்பு கொண்ட நாடாக மாறியுள்ளது.
அந்தவகையில், புதிதாக மேலும் 12 பேருக்கு குரங்கு அம்மை வைரஸ் பரவியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 132 ஆக உயர்ந்துள்ளது.
96 பேர் மாட்ரிட் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள், கேனரி தீவில் 6 பேரும், கட்டலோனியாவில் 9 பேர், பாஸ்க் பிராந்தியத்தைச் சேர்ந்த 3 பேர், அண்டலூசியாவிலிருந்து 4 பேர், அரகோன் மற்றும் கலீசியாவில் தலா ஒருவரும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் லேசான அறிகுறிகள் உள்ளதால் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். உலக சுகாதார அமைப்பின் படி, குரங்கு அம்மை வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு காயங்கள், காய்ச்சல், சுவாச துளிகள் போன்றவற்றுடன் நெருங்கிய தொடர்பு மூலம் பரவுகிறது.