சரக்குப் போக்குவரத்துக்கு தடை: லிதுவேனியாவுக்கு உரிய பதிலடி- ரஷியா எச்சரிக்கை

தங்களது எல்லை வழியாக குறிப்பிட்ட ரஷியப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கு தடைவிதிக்கும் லிதுவேனியாவின் முடிவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷியா எச்சரித்துள்ளது.
நிக்கோலாய் பேட்ருஷெவ்
நிக்கோலாய் பேட்ருஷெவ்

தங்களது எல்லை வழியாக குறிப்பிட்ட ரஷியப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கு தடைவிதிக்கும் லிதுவேனியாவின் முடிவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷியா எச்சரித்துள்ளது.

 இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்பு கவுன்சில் செயலர் நிக்கோலாய் பேட்ருஷெவ் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

 தங்கள் நாட்டின் இருப்புப் பாதை வழியாக ரஷியாவிலிருந்து கலினின்கிராட் பிராந்தியத்துக்கு குறிப்பிட்ட பொருள்களை எடுத்துச் செல்வதற்கு லிதுவேனியா தடை விதித்துள்ளது.

 இது போன்ற செயல்களுக்கு உரிய பதிலடி கொடுக்காமல் விடமாட்டோம். பதிலடி நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான திட்டங்களை ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் அந்த நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும்.
 பொருள்கள் போக்குவரத்துத் தடைக்கு ரஷியா ஆற்றவிருக்கும் எதிர்வினை, லிதுவேனிய மக்களை குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கும் என்றார் அவர்.
 எனினும், லிதுவேனியாவுக்கு எதிராக எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

 ஐரோப்பிய யூனியன் தூதருக்கு சம்மன்: இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து மாஸ்கோவிலுள்ள ஐரோப்பிய யூனியன் தூதர் மார்கஸ் எடெரெரை ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்து தனது கண்டனத்தைத் தெரிவித்தது.

 இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரஷியாவுக்கும் கலினின்கிராட் பகுதிக்கும் இடையிலான சரக்குப் போக்குவரத்தை மீண்டும் சஜக நிலைக்குக் கொண்டு வர வேண்டுமென்று ஐரோப்பிய யூனியன் தூதரிடம் வலியுறுத்தப்பட்டது. அவ்வாறு செய்யத் தவறினால் உரிய எதிர் நடவடிக்கைககள் எடுக்கப்படும் என்று அவரிடம் எச்சரிக்கப்பட்டது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பால்டிக் கடலையொட்டி அமைந்துள்ள ஜெர்மனியின் கலினின்கிராட் பகுதியை ரஷியா கடந்த 1945-ஆம் ஆண்டு இணைத்துக் கொண்டது.

 எனினும், ரஷியாவின் மற்ற பகுதிக்கும் கலினின்கிராட் பகுதிக்கும் இடையே லாட்வியா, லிதுவேனியா ஆகிய நாடுகள் உள்ளன.
 எனவே, லிதுவேனியா வழியாகவே ரயில் மூலம் கலினின்கிராடுக்கு பொருள்கள் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து பொருள்கள் ரஷியாவின் பிற பகுதிகளுக்கு கொண்டு வரபப்பட்டன.

 இந்தச் சூழலில், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.
 அதனைக் கண்டிக்கும் வகையில், ரஷியா மீது ஐரோப்பிய யூனியன் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது.
 அதன் ஒரு பகுதியாக, குறிப்பிட்ட பொருள்களை ரஷியாவிலிருந்து கொண்டு வருவதற்கும் வெளியிலிருந்து ரஷியாவுக்குள் கொண்டு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.

அந்தப் பொருளாதாரத் தடையை பின்பற்றியே குறிப்பிட்ட பொருள்களை தங்கள் எல்லை வழியாக ரஷியா கொண்டு செல்ல அனுமதி மறுப்பதாக லிதுவேனியா தெரிவித்துள்ளது.

 ரஷியாவுக்கு எதிராக தாங்கள் எந்தத் தடையையும் விதிக்கவில்லை; ஐரோப்பிய யூனியனின் தடை மட்டுமே செயல்படுத்தப்படுகிறது என்று லிதுவேனியா கூறி வருகிறது.

 எனினும், இந்த விவகாரத்தில் லிதுவேனியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷியா தற்போது எச்சரித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com