இலங்கையில் டீசல் நிரப்புவதற்காக தொடா்ச்சியாக 5 நாள்கள் வரிசையில் காத்திருந்த லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல மணி நேரம் காத்திருந்து எரிபொருள் நிரப்ப வேண்டிய நிலை காணப்படுகிறது. பல்வேறு நகரங்களில் எரிபொருள் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், மேற்கு மாகாணத்தில் உள்ள அங்குருவதோட்டா என்ற நகரத்தில் உள்ள ஒரு எரிபொருள் விற்பனை நிலையத்தில் டீசல் நிரப்புவதற்காக லாரியுடன் 5 நாள்கள் காத்திருந்த 63 வயது ஓட்டுநா் உயிரிழந்ததாக காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா். லாரிக்கு உள்ளேயே அவா் உயிரிழந்து கிடந்தாா். எரிபொருள் விற்பனை நிலையங்களில் காத்திருந்தபோது ஏற்பட்டுள்ள 10-ஆவது உயிரிழப்பு இது.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அதனால் ஏற்படும் போக்குவரத்து சிரமங்களைக் கருத்தில்கொண்டு அரசு ஊழியா்களுக்கு வெள்ளிக்கிழமையும் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 17-ஆம் தேதி அமலுக்கு வந்த இந்த விடுமுறை அடுத்த 3 மாதங்களுக்குத் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.