கொலம்பியாவில் முதல்முறை இடதுசாரி ஆட்சி: அதிபரானார் கஸ்டாவோ பெட்ரோ
லத்தீன் அமெரிக்க நாடான கொலம்பியாவில் முதல் முறையாக இடதுசாரி கட்சி ஆட்சி அமைந்துள்ளது.
கொலம்பியாவின் 200 ஆண்டுகால விடுதலை வரலாற்றில் பழமைவாத கட்சிகளை பின்னுக்குத்தள்ளி முதல் முறையாக இடதுசாரி கட்சி ஆட்சிப் பிடித்துள்ளது. அதன்படி இடதுசாரி கட்சியை சேர்ந்த கஸ்டாவோ பெட்ரோ (Gustavo Petro) புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் அரசுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வந்த வலதுசாரி ஜனநாயக கட்சியை சேர்ந்த இவான் டியூக் அரசுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
கொலம்பியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வறுமைக்கு தீர்வாக எந்தவொரு நிலையான நடவடிக்கையையும் எடுக்காததால் வலதுசாரி ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், கொலம்பியாவில் கடந்த மாதம் அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் இடதுசாரி கட்சியை சேர்ந்த கஸ்டாவோ பெட்ரோ, வலதுசாரி சார்பில் ரோடோல்போ ஹெர்னாண்டஸ் (Rodolfo Hernandez) ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் 50.48 சதவிகித வாக்குகளைப் பெற்று பெட்ரோ வெற்றி பெற்றார். 47.3 சதவிகித வாக்குகளுடன் ஹெர்னாண்டஸ் தோல்வியடைந்தார். இதனைத் தொடர்ந்து கொலம்பியாவின் புதிய அதிபராக கஸ்டாவோ பெட்ரோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கொலம்பியா சுதந்திரம் பெற்ற 200 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக வலதுசாரி கட்சிகளை பின்னுக்குத்தள்ளி இடதுசாரி கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. இதனால் பொதுமக்கள் நம்பிக்கை அடைந்துள்ளனர்.
துணை அதிபராக கருப்பினத்தைச் சேர்ந்த பிரான்ஸியா மார்கஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வழக்குரைஞரான இவர், மனித உரிமை ஆர்வலராகவும், சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் உள்ளார்.