ரஷ்யா-உக்ரைன் போர் ஏழாவது நாளாக நடந்து வரும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டு, அங்கிருந்த தூதரக அதிகாரிகள் அனைவரும் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள லிவிவ் நகருக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நாளுக்கு நாள் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்றுவதை எளிதாக்குவதற்கு இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷியப் படைகள், கீவ் நகரின் ஏனைய பகுதிகளையும் தாக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அங்கி சிக்கியிருந்த மீதமுள்ள அனைத்து இந்தியர்களும்"அவசரமாக" வெளியேறுமாறு வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டதை அடுத்து, வெளியேற்றப்பட்டு நாட்டின் மேற்கு பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதையடுத்து கீவ் நகரில் இருந்து வெளியேற இந்தியர்கள் யாரும் இல்லை என்ற நிலையில், தூதரகம் மூடப்பட்டு அங்கு பணியில் இருந்த அதிகாரிகள் மேற்கு பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
போர் தீவிரமடைந்த நிலையில், பல இந்திய மாணவர்கள் கார்கிவ் மற்றும் சுமி போன்ற சண்டை தீவிரமாக இருக்கும் பகுதிகளில் தொடர்ந்து சிக்கித் தவித்தனர்.
போர் பதற்றம் தொடங்கியதில் இருந்து உக்ரைனில் சிக்கியுள்ள ஏறத்தாழ 12 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இது அங்கு வசிக்கும் மொத்த மக்களின் எண்ணிக்கையில் 40 சதவிகிதம் என்று வெளியுறவு செயலாளர் கூறியுள்ளார்.
இந்திய விமானப்படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானம் புதன்கிழமை ருமேனியாவுக்கு புறப்படும், அதே நேரத்தில் 26 வணிக விமானங்களும் அடுத்த 2-3 நாள்களில் அண்டை நாடுகளில் இருந்து மீட்பு நடவடிக்கைளில் ஈடுபடுத்தப்படும்.
மேலும் கூடுதல் விமானங்கள் மூலம் மீட்கும் பணிகளில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
போர் அச்சுறுத்தலுக்கு உள்ளானதால், ஓராண்டுக்குள் ஒரு நாட்டில் உள்ள தனது தூதரகத்தை இந்தியா மூடுவது இது இரண்டாவது முறையாகும். 2021 ஆகஸ்ட் 16 ஆம் தேதி ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள தனது தூதரகத்தை இந்தியா மூடியது.
இதையும் படிக்க | உக்ரைன் போர்: இந்தியர்களை மீட்கச் சென்றது விமானப் படை விமானங்கள்