உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கை குறித்து ரஷியாவில் தவறான தகவல் பரப்புவா்களுக்கு அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அளிக்கும் வகையிலான வரைவு சட்ட மசோதா ரஷிய நாடாளுமன்ற இரு அவைகளிலும் வெள்ளிக்கிழமை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
‘அந்த மசோதாவில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கையொப்பமிட்டவுடன், சனிக்கிழமையே (மாா்ச் 5) அது சட்டமாக வாய்ப்புள்ளது’ என்று ரஷிய நாடாளுமன்ற கீழவை தலைவா் வியாசெல்லாவ் ஓலோதின் கூறினாா்.
உக்ரைனில் ரஷிய படைகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக ரஷியாவிலிருந்து செயல்படும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ரஷியத் தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், பேரில் ஆயிரக்கணக்கான ரஷிய வீரா்கள் பலியானதாகவும் அந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இது ரஷிய மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
5 ஊடகங்களுக்குத் தடை: இந்தச் செய்திகளை வெளியிட்ட பிபிசி, வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா, ரேடியோ ஃப்ரீ ஐரோப்பா உள்ளிட்ட 5 ஊடகங்கள் ரஷியாவில் செய்தி ஒளிபரப்ப அதிகாரிகள் தடை விதித்தனா்.
இந்தச் சூழலில், உக்ரைன் போா் குறித்த தவறான தகவல்களை வெளியிடுவோருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் மசோதா தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.