
உலகம் முழுவதும் கடந்த வாரம் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 17 சதவீதம் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த வாரத்தில் மட்டும் புதிதாக 1.1 கோடி பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, முந்தைய வாரத்தைவிட 8 சதவீதம் அதிகமாகும்.
ஆனால், கடந்த வாரம் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்தைவிட குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் 43,000 கரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இது, முந்தைய வாரத்தைவிட 17 சதவீதம் குறைவாகும்.
புதிய கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதில் மேற்கு பசிபிக் மற்றும் ஆப்பிரிக்க பிராந்தியம் பெரும் பங்கு வகிக்கின்றன. அங்கு வாராந்திர கரோனா தொற்று முறையே 29 சதவீதம் மற்றும் 12 சதவீதம் கரோனா தொற்று அதிகரித்துள்ளது.
வராந்திர கரோனா பலி எண்ணிக்கை மற்ற பிராந்தியங்களில் குறைந்து வந்தாலும், மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் அந்த எண்ணிக்கை முந்தைய வாரத்தைவிட அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...