உக்ரைனின் மரியுபோல் நகரில் ஒரு லட்சம் மக்கள் மனிதாபிமானமற்ற நிலையில் சிக்கியுள்ளதாக அந்நாட்டு அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் மூன்று வாரங்களைக் கடந்து தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் மிக முக்கிய நகரமான மரியுபோல் மீது ரஷியப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
அங்குள்ள பெரும்பாலான கட்டடங்களை தகர்த்துள்ளதால் மக்கள் தஞ்சம் புக இடமின்றித் தவிக்கின்றனர்.
இந்நிலையில், ரஷியாவின் தாக்குதலால் மரியுபோல் நகரில் ஒரு லட்சம் மக்கள் மனிதாபிமானமற்ற நிலையில் சிக்கியுள்ளதாக அந்நாட்டு அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மரியுபோல் துறைமுக நகரத்திலிருந்து மக்களை வெளியேற்றும் முயற்சிகளை ரஷியா தடுத்து வருவதாக ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
'இன்றைய நிலவரப்படி, நகரத்தில் சுமார் ஒரு லட்சம் மக்கள் மனிதாபிமானமற்ற நிலையில் சிக்கியுள்ளனர். அவர்கள் முற்றுகையிடப்பட்டுள்ளனர், உணவு , தண்ணீர், மருந்துகள் இல்லாமல் அவர்கள் அவதிப்படுகின்றனர்' என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவச் சென்ற உக்ரேனியர்களையும் வாகனத்தையும் ரஷிய வீரர்கள் சிறைப்பிடித்துள்ளதாகவும் உக்ரைன் அதிபர் குற்றம்சாட்டியுள்ளார்.