உக்ரைன் போரில் ரஷியாவிற்கு உதவினால் சீனா கடும் பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் தொடர்ந்து ஒரு மாதத்தை எட்டியுள்ளது. ரஷியாவின் தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ரஷியாவின் மீது பல்வேறு நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில்,
உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு குறித்து சீன அதிபர் ஷி ஜின்பிங் வருத்தம் தெரிவிக்கலாம். ஏனெனில் சீனாவின் எதிர்கால பொருளாதாரம் மேற்கு நாடுகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது என்பது சீனாவுக்கு நன்றாகவே தெரியும்.
உக்ரைன் போரில் ரஷியாவிற்கு உதவினால் சீனா கடும் பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும்
நான் அவரை அச்சுறுத்தவில்லை, தெளிவுபடுத்துகிறேன். ரஷியாவிற்கு உதவினால் ஏற்படும் விளைவுகளை அவர் புரிந்துகொண்டுள்ளார். அதனை நான் உறுதி செய்தேன்' என்றார்.
ரஷியாவுக்கு ஆதரவளிப்பதைத் தவிர்க்குமாறு பைடன் தொடர்ந்து சீனாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். கடந்த மார்ச் 18 ஆம் தேதி பைடன், சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் காணொலி வழியாக உரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.