உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா மீது மேற்குலக நாடுகள் பல்வேறு தடைகளை வதித்துள்ளன. இதற்கு பதிலடியாக, ரஷியாவிடமிருந்து வாங்கப்படும் எரிவாயுவுக்கு ரஷிய செலாவணியான ரூபிள் மட்டுமே அளிக்க வேண்டும் என அந்நாட்டின் அதிபர் புதின் வலியுறுத்தியிருந்தார்.
இதற்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மேக்ரான், "ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபடி ரஷியா செயல்படவில்லை. பிறகு, ஏன் அதை பின்பற்ற வேண்டும் என தெரியவில்லை. ரஷியாவின் இந்த செயலை தொடர்ந்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.
ஒப்பந்தம் தெளிவாக உள்ளது. அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, எரிவாயுவை வாங்கும் ஐரோப்பிய நாடுகள் யூரோவில் மட்டுமே அதை வாங்க வேண்டும். எனவே, புதின் கோரிக்கையை நிறைவேற்றுவது சாத்தியமில்லை. ஒப்பந்தத்திலும் அப்படி போடவில்லை. உக்ரைன் மீது படையெடுத்ததற்காக ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடைகளை தவிர்ப்பதற்காக அவர் இந்த வழிமுறையை பின்பற்றுகிறார்" என்றார்.
ரஷியாவின் செயலை கண்டித்துள்ள ஜெர்மனி, பண பரிவர்த்தனை எப்படி இருக்க வேண்டும் என்பது ஒப்பந்தத்தில் தெளிவாக உள்ளது என விளக்கம் அளித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளின் பெரும்பாலான எரிவாயு தேவையை ரஷியாதான் பூர்த்தி செய்துவருகிறது. இதனிடையே, ரஷிய எரிவாயுவை நம்பியிருக்கும் ஐரோப்பிய நாடுகள் அதன் தேவையை குறைக்க முடியாமல் திணறி வருகின்றன.
ரஷியா மீது பல்வேறு தடைகள் விதிக்கப்பட்ட போதிலும், எரிவாயு விற்பனை தொடர்பாக எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படாததால்
நாள் ஒன்றுக்கு மில்லியன் கணக்கிலான யூரோக்களை கொடுத்து ரஷியாவிடமிருந்து ஐரோப்பிய நாடுகள் எரிவாயுவை வாங்கிவருகிறது.