342 உறுப்பினர்கள் உள்ள பாகிஸ்தான் தேசிய நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் பெரும்பான்மையை இழந்துள்ளார். ஆளும் கூட்டணியிலிருந்து இரண்டு முக்கிய கட்சிகள் விலகியுள்ளதன் விளைவாக ஆளும் அரசு கவிழவுள்ளது.
கீழவை சபை கலைக்கப்படுவதை தவிர்க்கும் வகையில்
இம்ரான் கான் மற்றும் எதிர்கட்சிகளுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இம்ரான் கானுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ஆளும் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி, எதிர்கட்சிகள் ஆகியவைக்கிடையே ரகசியமாக பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.
நம்பிக்கையில்லா தீர்மானம் திரும்ப பெறப்பட்டால் நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படும் என ஆளும் கட்சி வாக்குறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது. இதில், ஆளும், எதிர்க்கட்சிகளுக்கிடையே ஒருங்கிணைப்பு ஏற்பட்டால் வாக்குறுதியை நிறைவேற்ற ஆளும் அரசின் மூத்த தலைவர் ஒருவரே பொறுப்பை ஏற்று கொள்வார் எனக் கூறப்படுகிறது.
அதன்படி, இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடைபெறும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இம்ரான் கானை நம்ப எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. முன்னதாக, பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் ஜாவேத் பஜ்வா, பிரதமர் இம்ரான் கான் ஆகியோருக்கிடையே புதன்கிழமையன்று சந்திப்பு நடைபெற்றது. இதை, அந்நாட்டின் தகவல்துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி உறுதி செய்துள்ளார்.
பாகிஸ்தான் சுதந்திரம் பெற்று 73ஆண்டுகள் ஆன நிலையிலும், பெரும்பாலான நேரத்தில் ராணுவமே ஆட்சி புரிந்துள்ளது. பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கையில் ராணுவம் குறிப்பிடத்தகுந்த அதிகாரத்தை கொண்டுள்ளது.