ரஷிய அதிபர் புதினை அந்நாட்டு ராணுவம் தவறாக வழிநடத்துவதாக அமெரிக்கா வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் ஆறாவது வாரமாக நடைபெற்று வருகிறது. ரஷியப் படைகள் உக்ரைனின் பல முக்கிய நகரங்களின் மீது தொடர் தாக்குதலை நடத்துவதால் போர் உச்சகட்ட பதற்றத்தை அடைந்து வருகிறது.
குறிப்பாக, உக்ரைன் தலைநகர் கீவைக் கைப்பற்ற ரஷியா தொடந்து முயற்சி செய்து வருவதால் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கேட் பெட்டிங் ஃபீல்ட் ’ ரஷிய ராணுவம் புதினை தவறாக வழிநடத்துகிறது. உக்ரைன் மீது நடத்தப்பட்ட தவறான போருக்கா, நீண்ட காலத்திற்கு இதன் விளைவுகளை ரஷியா அனுபவிக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், போர் துவங்கியதிலிருந்து உக்ரைனிலிருந்து அகதிகளாக வெளியேறியோரின் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 40 லட்சத்தை எட்டியிருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பின் தலைவர் பிலிப்போ கிராண்டி கூறியுள்ளார்.