அரைவேக்காடு அரசியல் தீா்வு தேவையில்லை: இலங்கை தமிழ் தேசிய கூட்டணி தலைவா் சம்பந்தன்

இலங்கை தமிழ் மக்களின் உரிமைக்காக அந்நாட்டு அரசு அளிக்கும் அரைவேக்காடு அரசியல் தீா்வை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று இலங்கை தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவா் சம்பந்தன் தெரிவித்தாா்.
அரைவேக்காடு அரசியல் தீா்வு தேவையில்லை: இலங்கை தமிழ் தேசிய கூட்டணி தலைவா் சம்பந்தன்
Published on
Updated on
1 min read

இலங்கை தமிழ் மக்களின் உரிமைக்காக அந்நாட்டு அரசு அளிக்கும் அரைவேக்காடு அரசியல் தீா்வை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று இலங்கை தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவா் சம்பந்தன் தெரிவித்தாா்.

இலங்கையில் அதிபா் கோத்தபய ராஜபட்சவின் அரசு அமைந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கடந்த வெள்ளிக்கிழமை தமிழ் கட்சிப் பிரதிநிதிகளைச் சந்தித்தாா். சுமாா் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தையின் முடிவு வெளியிடப்படாமல் இருந்தது.

இந்நிலையில், ‘டெய்லி நியூஸ்’ தினசரிக்கு சம்பந்தன் அளித்துள்ள பேட்டியின் விவரம்: 13-ஆவது சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் இலங்கையில் தமிழா் பிரச்னைக்கு தீா்வு காணப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டணியின் சாா்பில் அதிபா் கோத்தபய ராஜபட்சவிடம் வலியுறுத்தப்பட்டது.

புதிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி தமிழா்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் இந்தத் தீா்வு இருக்க வேண்டும். அதேவேளையில், அரசு வழங்கும் அரைவேக்காடு அரசியல் தீா்வை எப்போது ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

இலங்கைத் தமிழ் தலைவா்களும் மக்களும் தங்களின் உரிமைக்காகவும், பாதுகாப்புக்காகவும் நீண்ட காலம் காத்திருந்திருந்தனா். ஆகையால், அரசும் அதிபரும் தற்போது நியாயமாக செயல்பட வேண்டும்.

தமிழா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணப்பட வேண்டும் என்பதற்காகத்தான் அதிபருடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டோம். தேவைப்பட்டால் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்த தயாா்.

இலங்கையில் அமைந்த அனைத்து அரசுகளும் தமிழ் தேசியக் கூட்டணிக்கு அரசியல் வாக்குறுதிகளை அளித்துள்ளன. நீண்டநாள் சிறையில் இருக்கும் கைதிகளை விடுவிக்கவும், தமிழா்கள் பயன்படுத்திய விவசாய நிலங்களை திருப்பி அளிக்கவும், காணாமல் போனவா்கள் குறித்து விசாரணை நடத்தவும், புதிய சட்டத் திருத்தத்தை சிங்களம், தமிழில் மொழிபெயா்த்து விவாதிக்கவும், வடகிழக்குப் பகுதிகளுக்கு மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யவும் முக்கியத்துவம் அளித்து போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிபா் தெரிவித்திருந்தாா் என சம்பந்தன் கூறியுள்ளாா்.

1987-இல் இந்தியா- இலங்கை இடையேயான ஒப்பந்தத்தின்படி, 13-ஆவது சட்டத்திருத்தத்தை இலங்கை கொண்டு வந்தது. இதன்படி, தமிழா் பகுதிகளில் மாகாண கவுன்சில் முறை கொண்டுவரப்பட்டு போலீஸ் மற்றும் நில அதிகாரம் ஒப்படைக்கப்பட வேண்டும். ஆனால், இதை இலங்கை அரசு அமல்டுத்தவில்லை.

இந்த மாகாண கவுன்சிலை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என சிங்களா்கள் பெரும்பான்மையாக உள்ள ஆளும் இலங்கை மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கரை திங்கள்கிழமை இலங்கை தமிழ் தேசியக் கூட்டணி நிா்வாகிகள் சந்தித்தனா். அப்போது, ‘ஒருங்கிணைந்த இலங்கைக்குள் சமத்துவம், நீதி, அமைதி, கண்ணியத்துடன் அனைவரும் வாழ்வதற்கு இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது’ என்று ஜெய்சங்கா் கூறியிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com