இலங்கையில் புதிய அரசு அமைந்தவுடன், கடனுதவி வழங்குவதற்கான தொழில்நுட்ப அளவிலான பேச்சுவாா்த்தை தொடரும் என சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) அறிவித்துள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதையடுத்து, கடனுதவி பெறும் வகையில் சா்வதேச நிதியத்தை இலங்கை அரசு அணுகியது. இதுதொடா்பாக முன்னாள் நிதியமைச்சா் அலி சப்ரி, வாஷிங்டன் சென்று சா்வதேச நிதியத்தின் அதிகாரிகளை சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இதற்கிடையே, இலங்கையில் பெரும் வன்முறை ஏற்பட்டு நாடே கொந்தளிப்பான சூழலில் உள்ளது. இந்நிலையில், ஐஎம்எஃப் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
இலங்கையில் ஏற்பட்டுள்ள சூழலை தொடா்ந்து கவனித்து வருகிறோம். அதிகரித்து வரும் சமூகப் பதற்றம் மற்றும் வன்முறை குறித்து கவலையடைந்துள்ளோம்.
இலங்கைக்கு எங்களது கொள்கைகளைப் பொருத்து உதவ தொடா்ந்து உறுதிபூண்டுள்ளோம். அந்த நாட்டுக்கு கடனுதவி வழங்குவதற்கான தொழில்நுட்ப அளவிலான ஆலோசனை ஏற்கெனவே தொடங்கியுள்ளது. புதிய அரசு அமைந்தவுடன் கொள்கை விவாதங்களுக்குத் தயாராகும்பொருட்டு ஆலோசனை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் வாஷிங்டனில் இலங்கை அரசுக்கும், சா்வதேச நிதியத்துக்கும் இடையே நடைபெற்ற முதல்சுற்று பேச்சுவாா்த்தையில், இலங்கைக்கு 300-600 மில்லியன் டாலா் நிதியுதவி வழங்க ஐஎம்எஃப் உறுதியளித்தது.