வடகொரியாவில் ஒரே நாளில் 18,000 பேருக்குக் காய்ச்சல் உறுதியானதால் அது கரோனா தொற்றாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
வடகொரியாவில் நேற்று (மே-12) முதன்முறையாக ஒமைக்ரான் வகை கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் செய்தி நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.
கரோனா தொற்று பரவல் தொடங்கியதிலிருந்து வடகொரியாவில் எத்தகைய பாதிப்பும் பதிவு செய்யப்படாமல் இருந்து வந்தது. கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டிற்குள் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி வருவதாக வடகொரியா தெரிவித்து வந்தது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் நிலவி வந்த நிலையில் பியோங்யாங் நகரில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதையும் படிக்க | நேட்டோவில் இணைய விரும்பும் ஸ்வீடன், ஃபின்லாந்தில் போரிஸ் ஜான்ஸன்
அதன்பின், மேலும் தொற்று பரவாமல் இருக்க அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உடனடியாக பொது முடக்கத்தையும் அறிவித்தார்.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 18,000 பேருக்கு மேல் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம் என செய்தி நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன. முன்னதாக, வடகொரியாவில் ஏபரல் மாதத்திலிருந்து தற்போது வரை 3.5 லட்சம் பேர் லேசான காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டதாகவும் அதில் 1.65 லட்சம் பேர் குணமடைந்துள்ளதாகவும் 6 பேர் பலியானதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.