போரால் கடும் பாதிப்பைச் சந்தித்து வரும் உக்ரைனுக்கு மீண்டும் ரூ.3 லட்சம் கோடி நிதியுதவி வழங்க அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போர் 3 மாதங்களை எட்டவுள்ள நிலையிலும் ரஷியாவுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது.
போரில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நிதி மற்றும் ராணுவ உதவியையும் அளித்து வருகின்றன.
மேலும், ரஷியாவுக்கு எதிராகத் தொடர்ந்து போரிட உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்கப்படும் என நேட்டோ அமைப்பு அறிவித்ததுடன் ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைன் வெற்றி பெற முடியும் என நேட்டோ அமைப்பு தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றியுள்ள நிலையில் ரஷியப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் மரியுபோல் நகரில் உள்ள இரும்பாலையில் தாக்குதலில் காயமடைந்தர்வள் உள்ப்ட உக்ரைன் ராணுவ வீரர்கள்1,760 பேர் சரணடைந்துள்ளதாக நேற்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ரஷியாவின் பயங்கர தாக்குதலுக்கு கடும் சேதங்களைச் சந்தித்து வரும் உக்ரைனுக்கு நிதியுதவியாக 40 பில்லியன் டாலர்களை(ரூ.3.08 லட்சம் கோடி) அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன் 40 பில்லியன் டாலர் வழங்க ஒப்புதல் அளித்த நிலையில் மீண்டும் நிதியுதவி செய்ய அமெரிக்கா முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.