ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு அங்கு கடும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர். அதன்பின்னர் ஆப்கனில் பல்வேறு கட்டுப்பாடுகள் குறிப்பாக பெண்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு மக்களிடையே அமைதியற்ற சூழல் நிலவுகிறது.
இதனிடையே ஆப்கன் படைக்கும் தலிபான்களுக்கும் ஏற்பட்ட போரினால் அங்கு உணவுப் போரூக்ளின் விலை கூடியுள்ளது. இதனால் கடுமையான உணவுப் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களில் உணவுப் பொருள்களின் விலைகள் கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளதாக அங்குள்ள செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு மூட்டை மாவின் விலை 1,400 ஆப்கானி(ஆப்கானிஸ்தான் கரன்சி)க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது 2,800 முதல் 3,000 ஆப்கானிக்கு விற்கப்படுகிறது.
முன்பு 2,000 ஆப்கானிக்கு 20 லிட்டர் சமையல் எண்ணெயை வாங்கி வந்ததாக கூறும் மக்கள், தற்போது 10 லிட்டர் சமையல் எண்ணெயின் விலை 2,200 ஆப்கானியாக இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
டாலருக்கு நிகரான ஆப்கானிஸ்தான் கரன்சி(ஆப்கானி)யின் மதிப்பு குறையும்போது, உணவுப் பொருள்களின் விலைகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
உலக அளவில் கோதுமை பற்றாக்குறை இருக்கும் நிலையில் ஆப்கனிலும் கோதுமை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மக்கள்தொகையில் 97 சதவீதம் பேர் பசி மற்றும் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை கூறுகிறது. உணவு நெருக்கடிக்கு வேலையின்மையும் ஒரு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.
உள்ளூரில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், 95 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வருமானம் இல்லாததால் 56 சதவீதம் பேர் நாட்டை விட்டு செல்ல விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க | ஆப்கானிஸ்தான் டிவியில் பெண்களுக்கு கட்டாய ‘நக்காப்’