உக்ரைன் மீதான தாக்குதலை இன்றும் ரஷியப் படைகள் தொடர்ந்து வருகின்றன.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது. 7 மாதங்களைக் கடந்து போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ரஷியாவையும் அந்த நாட்டால் இணைத்துக்கொள்ளப்பட்ட உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தையும் இணைக்கும் பாலம், சனிக்கிழமை நடத்தப்பட்ட லாரி குண்டுவெடிப்பில் சேதப்படுத்தப்பட்டது. இதனால், அந்தத் தீவுடன் ரஷியாவுக்கு இருந்த ஒரே சாலை வழி விநியோக இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன்தான் காரணம் என்று ரஷியா குற்றம்சாட்டியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நேற்று காலை தலைநகர் கீவ் மீது 83 ஏவுகணை குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர். இதில், 20 பேர் பலியானதாகவும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை ஜாபோரிஜியா நகரின் மீது தொலைதூர தாக்குதலுக்கு பயன்படுத்தும் 12 எஸ்-300 ஏவுகணைகளை வீசியதாக உக்ரைன் அவசர சேவை மையம் தெரிவித்துள்ளது. இதில், ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
முன்னதாக, திடீர் தாக்குதல் குறித்து பேசிய ரஷிய அதிபர் புதின், ரஷியா மற்றும் அதன் பிராந்தியங்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தால், விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என எச்சரித்திருந்தார்.
இந்த தாக்குதல் குறித்து புதின் பேசியதாவது:
உக்ரைனின் ஆற்றல், ராணுவம் மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் ஏவுகணை மூலம் இன்று தாக்கப்பட்டன. ரஷியப் பகுதிகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட முயன்றால் தக்க பதிலடி வழங்கப்படும்.