இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாவதாக, அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நாட்டில் தற்போது பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் வசித்து வருவதை மேற்கோள்காட்டியிருக்கும் அந்த ஆய்வு, பாகிஸ்தானில் ஆணவக் கொலைகளும் அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டியிருக்கிறது.
பாகிஸ்தானிலிருந்து இயங்கும் தொலைக்காட்சி ஒன்று, பஞ்சாப் மாகாணா உள்துறை மற்றும் மனித உரிமைகள் அமைச்சகம் திரட்டிய தரவுகளை அடிப்படையாக வைத்து நடத்திய ஆய்வில், அண்மையில் பாகிஸ்தானில் பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்திருப்பதாகவும், அதே வேளையில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பது தொடர்ந்து 0.2 சதவீதமாகவே நீடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, புதிதாக திரட்டப்பட்டு ஒருங்கிணைப்பட்ட தரவுகளின் அடிப்படையில், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை பாகி1தானில் 21,900 பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க.. மீண்டும் ஒரு சுவாதியா? ரயில் முன் தள்ளி இளம்பெண் கொலை: இளைஞர் கைது
இந்த தரவின்படி பார்த்தால், நாட்டில் ஒவ்வொரு நாளும் தலா 12 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். அல்லது ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சித் தகவலை அந்த ஆய்வு தெரிவிக்கிறது. 2017ஆம் ஆண்டில் மட்டும் 3,327 பேரும், 2018ல் 4,456 பேரும், 2019ஆம் ஆண்டில் 4,573 பேரும், 2020ஆம் ஆண்டு 4,478 பேரும் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில், 2021ஆம் ஆண்டு இது 5,169 ஆக அதிகரித்துள்ளது.