எவ்வளவு காலமானாலும் நாங்கள் உக்ரைன் மக்களுடன் நிற்போம் : அமெரிக்கா
ரஷியா - கிரீமியா பாலத்தில் கடந்த வாரம் நடத்தப்பட்ட லாரி குண்டுவெடிப்பில் அந்தப் பாலம் சேதமடைந்தது. இதில் 3 போ் உயிரிழந்ததாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்தனா். அந்த குண்டுவெடிப்புக்கு பதிலடியாக, தலைநகா் கீவ் உள்ளிட்ட பல்வேறு உக்ரைன் நகரங்களில் ரஷியா கடந்த வாரத்தில் தீவிர ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைனின் தலைநகர் கீவ் ரயில் நிலையத்துக்கு அருகே, அதுவும் காலையில் அதிகம் பேர் பயணிக்கும் நேரத்தில் ரஷிய டிரோன்கள் நடத்திய தொடர் தாக்குதலில் பல இடங்களில் தீப்பற்றி எறிந்தது, பல குடியிருப்புக் கட்டடங்கள் பலத்த சேதமடைந்தன.
டிரோன்களின் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்பாக உடனடியாக எந்த தகவலும் இல்லை. ஒரு வாரத்துக்கு முன்பு, இதேப்போன்று கீவ் நகரில் காலை வேளையில் ரஷிய ஏவுகணைகள் தாக்குதல் நடத்தி பெரும் அழிவை ஏற்படுத்திய நிலையில், இன்று அதேப்போன்று டிரோன்கள் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
இது குறித்து கீவ் நகரிலுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
இன்று காலை பொதுமக்கள் மற்றும் குடிமக்களின் உள்கட்டமைப்புகளுக்கு எதிராக மிகவும் துணிச்சலான கண்டிக்கத்தக்க வகையில் தாக்குதல் நடைபெற்றது. உக்ரைன் மக்களின் வலிமை மற்றும் மீளக்கூடிய திறமையை நாங்கள் பாராட்டுகிறோம். எவ்வளவு காலம் வேண்டுமானாலும் நாங்கள் உங்களுடன் நிற்போம்.