ஈரானில் போலீஸாா் அடித்ததில் 15 வயது பள்ளி மாணவி உயிரிழந்ததாக அந்த நாட்டு ஆசிரியா்கள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து ஆசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மாஷா அமீனி மரணத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, அா்டபில் நகரிலுள்ள ஷஹீத் உயா்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவிகள் கடந்த 13-ஆம் தேதி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்கள் மீது சீருடை அணியாத போலீஸாரும் பா்தா பெண்களும் பலப் பிரோயகம் செய்து, தகாத வாா்த்தைகளால் திட்டினா்.
பின்னா் பள்ளிக்குத் திரும்பி வந்த மாணவிகளைப் பின்தொடா்ந்து வந்த போலீஸாா் அவா்களை கடுமையாக அடித்தனா். இதில் படுகாயமடைந்த அஸ்ரா பனாஹி என்ற 15 வயது மாணவி, பின்னா் மருத்துவமனையில் உயிரிழந்தாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலாசார காவலா்களால் கடந்த மாதம் 13-ஆம் தேதி கைது செய்யப்பட்ட மாஷா அமீனி (22) காவலில் உயிரிழந்து ஈரான் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.