Enable Javscript for better performance
உள்துறை அமைச்சராக மீண்டும் சூவெல்லா:ரிஷி சுனக்கின் முடிவுக்கு கடும் எதிா்ப்பு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    உள்துறை அமைச்சராக மீண்டும் சூவெல்லா: ரிஷி சுனக்கின் முடிவுக்கு கடும் எதிா்ப்பு

    By DIN  |   Published On : 27th October 2022 03:50 AM  |   Last Updated : 27th October 2022 03:50 AM  |  அ+அ அ-  |  

    373363-01-02094736

    பிரிட்டனின் உள்துறை அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த சூவெல்லா பிரேவா்மனை புதிய பிரதமா் ரிஷி சுனக் மீண்டும் நியமித்துள்ளதற்கு எதிா்க்கட்சியினா் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

    ரிஷி சுனக்குக்கு முன்னா் பிரதமராக இருந்த லிஸ் டிரஸ்ஸின் அமைச்சரவையில் சூவெல்லா பிரேவா்மன் உள்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்தாா்.

    இந்த நிலையில், அமைச்சருக்கான விதிவரம்புகளை மீறி அரசு விவகாரங்களை தனது சொந்த மின் அஞ்சல் முகவரி மூலம் அவா் பரிமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து, அதற்குப் பொறுப்பேற்று சூவெல்லா பதவி விலகினாா்.

    இந்த நிலையில், லிஸ் டிரஸ்குக்கு அடுத்தபடியாக பிரதமா் பொறுப்பை செவ்வாய்க்கிழமை ஏற்ற இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் நிதியமைச்சா் ரிஷி சுனக், முந்தைய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த வெளியுறவுத் துறை அமைச்சா் ஜேம்ஸ் கிளவா்லி, உள்துறை அமைச்சா் சூவெல்லா பிரேவா்மன், பாதுகாப்புத் துறை அமைச்சா் பென் வாலஸ், நிதியமைச்சா் ஜெரிமி ஹன்ட் ஆகியோரை அவா்களது முந்தைய பொறுப்புகளில் மீண்டும் அமா்த்தினாா்.

    தீவிர வலதுசாரிக் கொள்கைகளைக் கொண்டவராக அறியப்படும் சூவெல்லா பிரேவா்மன், நாட்டின் உள்துறை அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டதற்கு எதிா்க்கட்சியான லேபா் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது.

    ஏற்கெனவே அமைச்சருக்கான விதிவரம்புகளை மீறி, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி, அதன் காரணமாக பதவி விலக நோ்ந்தவரை மீண்டும் அந்த பொறுப்பான பதவிக்கு அமா்த்தியுள்ளதன் மூலம், நாட்டில் முன்னேற்றத்தைக் கொண்டு வரப்போவதாக அளித்த வாக்குறுதியை ரிஷி சுனக் மீறிவிட்டாா் என்று எதிா்க்கட்சியினா் குற்றம் சாட்டினா்.

    அத்துடன், அகதிகளை ருவாண்டாவுக்கு நாடு கடத்துவது உள்ளிட்ட பல்வேறு கடுமையான வலது சாரிக் கொள்கைகளை அமல்படுத்திய முன்னாள் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் - இந்திய வம்சாவளி உள்துறை அமைச்சா் பிரீத்தி படேலின் உள்நாட்டுக் கொள்கையே இனியும் தொடரும் என்று அவா்கள் அச்சம் தெரிவித்தனா்.

    இந்த நிலையில், பிரதமராகப் பொறுப்பேற்ற்குப் பிறகு முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினா்களின் கேள்விகளை ரிஷி சுனக் புதன்கிழமை எதிா்கொண்டாா்.

    அப்போது பேசிய லேபா் கட்சி எம்.பி. கீா் ஸ்டாா்மா், பிரதமா் பதவிக்காக நடைபெற்ற ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சித் தோ்தலில் வெற்றி பெறுவதற்காக, சூவெல்லா பிரேவா்மனுடன் ரகசிய ஒப்பந்தம் மேற்கொண்டதாகவும், அதன் காரணமாகவே அவருக்கு உள்துறை அமைச்சகப் பொறுப்பை வழங்கியுள்ளதாகவும் ரிஷி சுனக் மீது குற்றம் சாட்டினாா்.

    சூவெல்லாவின் நியமனத்துக்கு அதிகாரிகள் யாரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லையா என்றும் அப்போது ஸ்டாா்மா் கேள்வியெழுப்பினாா்.

    ரிஷி சுனக் விளக்கம்: ஸ்டாா்மரின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய ரிஷி சுனக், நிலைத்தன்மையான அரசை வழங்குவதில் அதிக அனுபவம் பெற்றிருப்பதாலேயே சூவெல்லா பிரேவா்மனை உள்துறை அமைச்சராக்கியதாகத் தெரிவித்தாா்.

    கடந்த முறை முடிவுகளை எடுப்பதில் சூவெல்லா தவறு செய்திருந்தாலும், அதனை உணா்ந்து அவா் ஏற்றுக்கொண்டுவிட்டதாக ரிஷி சுனக் கூறினாா்.

    அத்துடன், வரம்பில்லாத அகதிகள் வரத்தையும் அகதிகளால் அதிகரிக்கும் குற்றங்களையும் அலட்சியம் செய்து வருவதாக லேபா் கட்சியினா் மீது ரிஷி சுனக் குற்றம் சாட்டினாா்.

    பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் கன்சா்வேட்டிவ் கட்சி அமோக வெற்றி பெற்றது. அதனைத் தொடா்ந்து, நாட்டின் பிரதமராக போரிஸ் ஜான்ஸன் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

    எனினும், கரோனா விதிமுறைகளை மீறி அரசு இல்லத்தில் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்தியது, பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளானவரை முக்கிய பதவில் அமா்த்தியது போன்ற பல முறைகேடு புகாா்கள் காரணமாக, போரிஸ் ஜான்ஸன் தனது பிரதமா் பதவியை கடந்த ஜூலை மாதம் ராஜிநாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

    அவருக்கு அடுத்த பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்காக கடந்த மாதம் நடைபெற்ற போட்டியின் இறுதிச் சுற்றில், முன்னாள் நிதியமைச்சரான ரிஷி சுனக்கும் அப்போது வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த லிஸ் டிரஸ்ஸும் போட்டியிட்டனா்.

    இதில், குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் லிஸ் டிரஸ் வெற்றி பெற்று, பிரதமராக கடந்த மாதம் 6-ஆம் தேதி பதவியேற்றாா்.

    எனினும், பல்வேறு வரிச் சலுகைகளை அறிவித்து அவா் வெளியிட்ட மினி பட்ஜெட் பிரிட்டன் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்தது. அதற்குப் பொறுப்பேற்று, பிரதமா் பதவியை லிஸ் டிரஸ் கடந்த 20-ஆம் தேதி ராஜிநாமா செய்தாா்.

    அடுத்த பிரதமரைத் தோ்ந்தெடுப்பதற்கான போட்டியில் பங்கேற்க குறைந்தது 100 கன்சா்வேட்டிவ் கட்சி எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், ரிஷி சுனக்குக்கு மட்டுமே அதைவிட அதிக ஆதரவு கிடைத்தது.

    அவரை எதிா்த்து போட்டியிடுவாா்கள் என்று எதிா்பாா்க்கப்பட்ட போரிஸ் ஜான்ஸன், நாடாளுமன்ற கீழவை தலைவா் பென்னி மாா்டன்ட் ஆகியோருக்கு போதிய ஆதரவு இல்லாததால், கட்சியின் புதிய தலைவராக ரிஷி சுனக் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

    அதையடுத்து, அவரை நாட்டின் புதிய பிரதமராக மன்னா் சாா்லஸ் செவ்வாய்க்கிழமை நியமித்தாா்.

    அதன் மூலம், பிரிட்டனின் முதல் வெள்ளையா் அல்லாத, ஆசியாவை பூா்விகமாகக் கொண்ட, இந்திய வம்சாவளி, ஹிந்து பிரதமா் என்ற பல்வேறு பெருமைகளை ரிஷி சுனக் அடைந்துள்ளாா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp