நடப்பாண்டில் உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில் 82,000 மாணவர்களுக்கு விசா வழங்கியுள்ளது அமெரிக்கா.
இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் 2022 ஆம் ஆண்டில் இதுவரை 82,000 மாணவர்களுக்கு விசா வழங்கியுள்ளது. இது உலகில் மற்ற நாடுகளைவிட அதிகமாகும். மொத்தம் விசா வழங்கப்பட்ட மாணவர்களில் 20% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'கடந்த ஆண்டுகளில் கரோனாவால் ஏற்பட்ட தாமதத்திற்குப் பிறகு, மாணவர்கள் பலரும் தற்போது விசா பெற்று தங்கள் படிப்பைத் தொடர்வது கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த கோடையில் மட்டும் 82,000 மாணவர்களுக்கு விசாக்களை நாங்கள் வழங்கியுள்ளோம். இது முந்தைய ஆண்டை விட அதிகம்.
பெரும்பாலான இந்தியர்கள், உயர்கல்விக்காக அதிகம் விரும்பும் நாடாக அமெரிக்கா உள்ளது என்பதை இது காட்டுகிறது. அமெரிக்கர்களுடன் தொடர்பை வளர்த்துக்கொள்வதால் நம் இரு நாடுகளுக்கும் இந்திய மாணவர்கள் செய்யும் முக்கியப் பங்களிப்புகளையும் இது எடுத்துக் காட்டுகிறது' என்று அமெரிக்க தூதரகப் பொறுப்பாளர் பாட்ரிசியா லசினா கூறினார்.
புதுதில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம், சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் மும்பையில் உள்ள நான்கு தூதரகங்கள் கடந்த மே முதல் ஆகஸ்ட் வரை மாணவர்களுக்கான விசாக்களை பரிசீலித்து அனுமதி வழங்கியுள்ளன.