சீனாவால் உரிமை கோரப்படும் சுயராஜ்ய தீவை சீனா ஆக்கிரமிக்க முயன்றால், தைவானை அமெரிக்கப் படைகள் பாதுகாக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார்.
தைவானை தங்களுடன் இணைத்துக் கொள்ளும் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள, தேவைப்பட்டால் அந்தத் தீவின் மீது போா்த் தொடுக்கவும் தயங்கப்போவதில்லை என்றும், தைவானை அமைதியான வழிமுறையிலேயே எங்களுடன் மீண்டும் இணைத்துக்கொள்ள விரும்புகிறோம்.
ஆனால் அதற்காக, அமைதி வழி மட்டுமே பின்பற்றப்படும் என்றோ, ராணுவ பலத்தைப் பயன்படுத்துவது உள்ளிட்ட அனைத்துத் தேவையான வழிமுறைகள் பின்பற்றப்படாது என்றோ உறுதியளிக்க மாட்டோம் என்று சீனா மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடுத்து வருகிறது.
1949 இல் சீன உள்நாட்டுப் போருக்குப் பிறகு தைவான் தனி நாடாக செயல்பட்டு வருகிறது. எனினும், அந்தத் தீவை தங்கள் நாட்டின் ஓா் அங்கமாக சீனா கருதி வருகிறது.
தைவானை தாங்கள் எப்போது வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம் என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் கூறி வருகிறாா்.
தைவானை தனி நாடாக அங்கீகரிப்பதைப் போல், அந்தத் தீவுக்கு எந்தத் தலைவா் சென்றாலும் அதற்கு சீனா கண்டனம் தெரிவித்து வருகிறது.
இதையும் படிக்க | அமெரிக்காவில் கரோனா பேராபத்து முடிவுக்கு வந்ததாக ஜோ பைடன் அறிவிப்பு
இந்தச் சூழலில், தனது ஆசிய சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக தைவானுக்கு நான்சி பெலோசி கடந்த ஆகஸ்ட் மாதம் சென்று வந்தார். 25 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க நாடாளுமன்ற அவைத் தலைவா் ஒருவா் தைவான் சென்று வந்தது இதுவே முதல் முறையாகும்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் சீன ராணுவத்தின் கிழக்கு மண்டலப் பிரிவு தைவானைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் வான்வழியாகவும் கடல் வழியாகவும் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி போா் பயிற்சியில் ஈடுபட்டு வந்தது.
போா்ப் பதற்றத்தை அதிகரித்து, கடல் வா்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி இந்தப் போா்ப் பயிற்சிக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
தங்கள் மீது படையெடுத்து சீனாவுடன் இணைத்துக் கொள்வதற்கான ஆயத்தமாகவே இந்தப் போா்ப் பயிற்சியில் அந்த நாடு ஈடுபட்டு வருவதாக தைவான் எச்சரித்தது.
இந்நிலையில், சீனாவால் உரிமை கோரப்படும் சுயராஜ்ய தீவை சீனா ஆக்கிரமிக்க முயன்றால், தைவானை அமெரிக்கப் படைகள் பாதுகாக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை சிபிஎஸ் நியூஸின் 60 நிமிடங்கள் நடைபெற்ற நேர்காணல் நிகழ்ச்சியின் போது, சீனப் படையெடுப்பு ஏற்பட்டால், தைவானை அமெரிக்கப் படைகள், அமெரிக்க ஆண்களும் பெண்களும் தைவானைப் பாதுகாப்பார்களா என்று கேட்டதற்கு, ஆம் என்று பைடன் கூறினார்.
பைடனுடனான நேர்காணலுக்குப் பிறகு அமெரிக்க கொள்கையில் மாற்றமில்லை என்று வெள்ளை மாளிகை கூறியதாக சிபிஎஸ் செய்தி தெரிவித்துள்ளது.
மேலும், தைவானின் நிலை அமைதியான முறையில் தீர்க்கப்படுவதை வாஷிங்டன் விரும்புவதாகவும், ஆனால், சீனாவின் தாக்குதலை சந்திப்பதற்கு அமெரிக்கப் படைகள் அனுப்பப்படுமா என்பதற்கு பதிலளிக்கவில்லை என்று கூறியுள்ளது.