ஈரானில் பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதல் சம்பவங்களில் இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். கடந்த வார இறுதி முதல் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ஈரானின் பல்வேறு பகுதிகளுக்கும் போராட்டம் பரவி வருகிறது.
இதையும் படிக்க | ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருப்பவர்கள் கவனிக்க..
ஈரானில் நன்னெறி பிரிவு காவலா்களால் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர்.
சமூக வலைத்தளங்கள் மூலம் போராட்டக்காரர்கள் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து, போராட்டத்தை நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருகிறார்கள். இதனால், பல இடங்களில் இணையதளங்களை முடக்கியம் ஈரான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அமினியின் உயிரிழப்பைக் கண்டித்து நடத்தப்பட்டு வரும் போராட்டம் தலைநகா் தெஹ்ரானுக்கும் பரவியது. வடக்கு நகரமான ராஸ்டில் காவல் துறை வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட 22 போ் கைது செய்யப்பட்டனா்.
இதையும் படிக்க | வாழ்க்கைத் துணை உங்களை அதிகம் நேசிப்பதற்கு இதுதான் அறிகுறி
ஈரானில் முஸ்லிம் பெண்கள் முகத்தை முழுமையாக மறைக்கும் ஹிஜாப் அணிவது கட்டாயம். இதைக் கண்காணித்து ஹிஜாப் அணியாதவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக நன்னெறி பிரிவு காவலா்கள் உள்ளனா். இந்நிலையில், கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நன்னெறி பிரிவு காவலா்கள் ரோந்து சென்றபோது, மாசா அமினி (22) என்ற பெண் ஹிஜாப்பை சரியாக அணியவில்லை எனக் கூறி, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவா் மயங்கி விழுந்தாா். மூன்று நாள்கள் கழித்து அவா் உயிரிழந்தாா்.
காவலா்கள் துன்புறுத்தியதால்தான் அந்தப் பெண் உயிரிழந்ததாகப் புகாா் எழுந்தது.
ஆனால், அந்தப் பெண் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகவும், அவரை யாரும் துன்புறுத்தவில்லை எனவும் காவல் துறை தெரிவித்தது.
அமினியின் தந்தை அம்ஜத் அமினி ஈரானிய செய்தி வலைதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனது மகள் போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டதை சிலா் பாா்த்ததாகத் தெரிவித்தாா்.
அமினி காவல் நிலையத்தில் மயங்கி விழும் விடியோ காட்சியை காவல்துறை வெளியிட்டது. ஆனால், அவருக்கு இதய பாதிப்பு எதுவும் இருந்ததில்லை என அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா்.