ட்விட்டர் பதிவில் எடிட் செய்யும் வசதி விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் ஒரு பொதுவான சமூக வலைத்தளமான ட்விட்டர், அவ்வப்போது தன் சேவையில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்தவகையில் ட்விட்டரில் எடிட் செய்யும் வசதி பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது.
இதனை கடந்த மாதம் சோதனை முறையில் 'ட்விட்டர் புளூ' (Twitter Blue) சந்தாதாரர்களுக்கு வழங்குவதாக அந்நிறுவனம் கடந்த மாதம் அறிவித்தது. அதாவது அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் 5 டாலர் வரை கட்டணம் செலுத்தும் சந்தாதார்களுக்கு அறிமுகப்படுத்த உள்ளது.
இந்நிலையில், ட்விட்டர் எடிட் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. எடிட் பட்டன் எவ்வாறு வேலை செய்யும் என அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
அதன்படி, ட்வீட் செய்து 30 நிமிடங்களில் பதிவை சில முறை திருத்த முடியும். 'கடைசியாக திருத்தப்பட்டது' என அந்த நேரமும் பதிவில் காட்டப்படும். அதுமட்டுமின்றி முந்தைய பதிவுகளையும் பார்க்கும் 'ஹிஸ்டரி' வசதியும் உள்ளது. இதன் மூலமாக எடிட் செய்யப்பட்டது என்பதை பார்வையாளர்கள் அறிய முடியும் என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சோதனை அடிப்படையில் 'ட்விட்டர் புளூ' சந்தாதாரர்களுக்கு இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்படும். விரைவில் இதர பயனர்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.