புவி நாளையொட்டி காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது கூகுள்.
பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் நிறுவனம், முக்கிய நாள்களை நினைவு கூறும் அல்லது கௌரவிக்கும் பொருட்டு சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டு வருகிறது.
அந்தவகையில் இன்று புவி நாளையொட்டி, காலநிலை மாற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க, தனிநபர்களும் சமூகங்களும் எவ்வாறு இணைந்து செயல்பட முடியும் என்பதை எடுத்துக்காட்டும் விவாதத்தில் கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது.
சித்திரத்தில், வீட்டில் உலர்த்தியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக காற்றில் துணிகளை உலர்த்துவது, மரங்களை நடுவது, சோலாரைப் பயன்படுத்தி மின்சாரம், உணவுத் தாவரங்களை வளர்த்தல், தாவர உணவுகளை சாப்பிடுவது, பெட்ரோல் வாகனத்திற்குப் பதிலாக சைக்கிள் ஓட்டுவது என காலநிலை மாற்றத்தை சரிசெய்யும் வழிகளை கூறியுள்ளது கூகுள்.
சுற்றுச்சூழல் மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 ஆம் தேதி புவி நாள் கடைப்பிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.