

பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ள தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நடிகை, குளிர்பான மூடிகளைக் கொண்டு அணிந்து வந்த உடை பலரைக் கவர்ந்தது.
குப்பையில் வீசப்பட்ட குளிர்பான மூடிகளைச் சேர்த்து தயாரிக்கப்பட்ட உடையை அணிந்து வந்ததற்கான காரணம் குறித்தும் பிரபஞ்ச அழகி போட்டிக்கான மேடையில் அவர் பேசியது பலரை நெகிழச் செய்துள்ளது.
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 24 வயதான அன்னா சுயேங்கம் என்ற நடிகை, 2022ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார்.
கடந்த புதன்கிழமை (ஜன. 11) நடைபெற்ற போட்டியின்போது அவர், குப்பையில் வீசப்பட்ட குளிர்பான மூடி திறப்பான்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்தார்.
மேடையில் வித்தியாசமான உடையை அணிந்துவந்ததால் பலரின் கவனத்தை அன்னா ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து அந்த உடை அணிந்து வந்ததற்கான காரணத்தையும் அவர் விளக்கினார். அந்த காரணம் பலரை நெகிழ்ச்சியடையச் செய்தது.
அவர் மேடையில் இருந்த புகைப்படங்களைப் பகிர்ந்து அவர் பதிவிட்டுள்ளதாவது, குப்பை சேகரிக்கும் தந்தைக்கும், தெருவை சுத்தம் செய்யும் தாயிக்கும் மகளாக பிறந்தவள் நான். குப்பை என் வாழ்வில் புதிதல்ல, குப்பைகளுடனும், மறுசுழற்சி செய்யும் பொருள்களுடனும் வாழ்ந்தவள் நான். சிறுவயது முதலே என்னைச் சுற்றியிருந்த பொருள்களைக் கொண்டு செய்த உடையை நான் அணிந்து வந்துள்ளேன். பலரால் மதிப்பிழந்ததாக கருதப்பட்டு தூக்கியெறியப்பட்ட பொருள்கள் உண்மையிலேயே தன்னுடைய மதிப்பையும் அழகையும் இப்போது எனக்குள் இருந்து காட்டுகின்றன. அந்த உடையின் அழகைப் பார்த்தவர்களுக்கும், என் பேச்சைக் கேட்டவர்களுக்கும் நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.