300 ஆண்டு பழைமையான நாளிதழ் நிறுத்தம்: கடைசி முகப்புப் பக்கம்
உலகிலேயே மிகப் பழைமையான நாளிதழ் என்ற பெருமையைப் பெற்ற வியன்னாவைச் சேர்ந்த வீனட் செய்துங் என்ற நாளிதழ், வெள்ளிக்கிழமையுடன் வெளியீட்டை நிறுத்திவிட்டது.
கிட்டத்தட்ட 320 ஆண்டுகள் தொடர்ந்து நாளிதழை வெளியிட்டு வந்த அரசுக்குச் சொந்தமான வீனட் செய்துங் நாளிதழ் நிறுவனம், நிதி நெருக்கடி காரணமாக, வருவாய் இழப்பை சந்தித்து, நாளிதழ் வெளியீட்டையே நிறுத்திவிட்டுள்ளது.
வீனட் செய்துங் வெளியீட்டின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை, தனது நாளிதழின் முகப்புப் பக்கத்தில், 116,840 நாள்கள், 3,839 மாதங்கள், 320 ஆண்டுகள், 12 அதிபர்கள், 2 குடியரசுகள், 1 நாளிதழ் என தனது இதழுக்கு தானே இறுதி அஞ்சலி செலுத்திக் கொண்டது.
வீனட் செய்துங் முகப்புப் பக்கம், டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு, தி வீனட் செய்துங், உலகின் மிகப் பழைமையான நாளிதழ், தனது கடைசி இதழை வெளியிட்டுள்ளது. இதுதான் இந்த நாளிதழின் கடைசி முகப்புப் பக்கம் என்று பதிவிடப்பட்டிருந்தது.
இதற்கு வியன்னாவைச் சேர்ந்த ஏராளமான மக்கள் தங்களது வருத்தத்தைப் பதிவு செய்து வருகிறார்கள். பலரும் இந்த நாளிதழ் பக்கத்தை வாங்கி பிரேம் போட்டு வைத்துக் கொள்ளுவேன் என்றெல்லாம் உணர்ச்சிப்பொங்க பதிவிட்டு வருகிறார்கள்.