தென் கொரியாவில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் நாட்டின் பல பகுதிகளும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கனமழைக்கு 30-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். பலர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். பலரும் அவர்களது இருப்பிடத்தில் இருந்து பத்திரமான பகுதிக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: கிட்டத்தட்ட 400 மீட்புப் படை வீரர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தில் 15-க்கும் அதிகமான வாகனங்கள் நீருடன் அடித்து செல்லப்பட்டுள்ளது. சுரங்கப் பாதையில் சில வாகனங்கள் சிக்கிக் கொண்டுள்ளன. சுரங்கப் பாதையில் சிக்கியிருந்த வாகனத்தில் இருந்து 6 உடல்களை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். சுரங்கத்தில் வாகனங்களில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால், சுரங்கப் பாதையில் எத்தனை பயணிகள் சிக்கியுள்ளனர் என்பது தெரியவில்லை. இதுவரை 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்றனர்.
தென் கொரியாவில் கடந்த ஜூலை 9 ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.