கடும் வெயில் மூலம் மின்சார உற்பத்தி செய்யப்படுவதைப்போன்று, தற்போது மழைத்துளிகளின் மூலமும் மின்சார உற்பத்தி செய்யும் நடைமுறையை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
வெயில் நேரங்களில் சூரியனிலிருந்து வரும் கதிர் வீச்சுகளை சோலார் பேனல்களைப் பயன்படுத்தி மின்சாரமாக சேமித்து மின்சாதனங்களுக்குப் பயன்படுத்த இயலும்.
பல நிறுவனங்கள் மற்றும் வீடுகளின் மொட்டை மாடியில் சோலார் பேனல்கள் பொருத்தி சுயமாக தங்களின் தனிப்பட்ட பயன்களுக்கு மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது.
சோலாரின் மின் உற்பத்தி
சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் கதிர்வீச்சுகளை, சோலார் தகடுகள் உறிஞ்சிக் கொள்ளும். அதுவே மின்சாரமாக மாற்றப்படுகிறது.
சோலார் தகடுகள் மீது சூரிய ஒளிபடும்போது, தகடில் உள்ள ஃபோட்டோ வோல்டாயிக்ஸ் செல்கள், சூரிய ஒளியை உறிஞ்சி மின்சாரத்தை உருவாக்க உதவுகிறது. அதை மின்கலன்கள் (பேட்டரி) மூலம் சேமித்து விளக்குகள் உள்ளிட்ட இதர மின்சாதனப் பொருள்களுக்குப் பயன்படுத்தலாம்.
மழையில் மின் உற்பத்தி
வெயில் காலத்தில் வெப்பக் கதிர்வீச்சுகளைக் கொண்டு சோலார் பேனல்கள் மூலம் மின்சார உற்பத்தி நடைபெறுவதைப் போன்று தற்போது மழைத்துளிகள் மூலமும் மின் உற்பத்தி செய்ய முடியும்.
சீனாவைச் சேர்ந்த சிங்ஹுவா பல்கலைக் கழகம் மழைத்துளிகளின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆய்வை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.
இந்த ஆய்வில், திரவப் பொருளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் வகையில் டிரைபோ எலக்ட்ரிக் நானோ ஜெனரேட்டர் (TENG) செல்களை, சிங்ஹுவா பல்கலைக் கழக குழு பயன்படுத்தியுள்ளது.
இதேபோன்று டிராப்லட் டிரைபோ எலக்ட்ரிக் நானோ ஜெனரேட்டர் (D-TENG) செல்கள், அலைகள் மற்றும் திரவத் துளிகளிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது.
இந்த செல்கள் (மழைத்துளி விழும்போது ஏற்படும் ஆற்றல்) இயந்திர ஆற்றலை மின்னாற்றலாக மாற்றுகிறது. அதனை மின்கலன் கொண்டு சேமித்து மின்சாரப் பொருள்களுக்குப் பயன்படுத்தலாம்.
இது தொடர்பாக பேசிய பேராசிரியர் ஸோங் லீ, அதிக எண்ணிக்கையிலான சோலார் பேனல்களை அடுத்தடுத்து இணைப்பு கொடுத்து அடர்த்தியாக வைப்பதன் மூலம் மழைத்துளியிலிருந்து குறிப்பிட்ட அளவு மின் உற்பத்தியை செய்ய முடியும். மழையிலிருந்து மின்சாரம் தயாரிக்க மிக எளிமையான வழி இது. இந்த ஆய்வின் மூலம், சோலார் பேனல் தொழில்நுட்பம் நம்பகமான மேம்பாட்டை அடைந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.