எகிப்தில் பணவீக்கம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எகிப்தில் பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எகிப்து பொருளாதார நெருக்கடியின் நடுவில் உள்ளது. எகிப்தின் பண மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. கடந்த ஜனவரியில் ஆண்டிற்கான பணவீக்கம் 26.5 சதவிகிதம் என இருந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் அது 32.9 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: பொன்னியின் செல்வன் - 2 முதல் பாடல் அறிவிப்பு!
தானியங்கள், இறைச்சி, மீன் மற்றும் பழங்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு உணவுப் பொருட்களின் விலை 61.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது. எகிப்தில் உள்ள மக்களில் மூன்றில் ஒரு பங்கு வறுமையில் உள்ளனர். அவர்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் விலைவாசியினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு உக்ரைன் போருக்குப் பின் உலகின் பல நாடுகளும் பணவீக்கம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை சந்தித்தனர். எகிப்து அதிகமாக கோதுமையை இறக்குமதி செய்யும் நாடாகும். எகிப்து தனக்குத் தேவையான கோதுமையினை அதிக அளவில் கிழக்கு ஐரோப்பாவில் இருந்தே இறக்குமதி செய்து வருகிறது.
தனது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவர அண்மையில் சர்வதேச நிதியத்திடம் இருந்து 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை எகிப்து நிதியுதவியாகப் (கடனாகப்) பெற்றது. இந்த உதவிக்கு பதிலாக எகிப்து சர்வதேச நிதியத்தின் பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்த ஒப்புக் கொண்டது.
இதையும் படிக்க: இந்தோனேசியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு!
எகிப்தின் பணம் தற்போது 50 சதவிகிதம் அதன் மதிப்பை இழந்துள்ளது. முன்னதாக, எகிப்து அரசு எரிபொருட்களின் விலையினை உயர்த்தியது. அதன்விளைவாக, பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைவாசி அதிகரித்தது. இந்த நிலையை சரிசெய்ய அரசு அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்ய சந்தைகளை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.