சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தனியார் விண்வெளி வீரர்களையும் ஏற்றிக்கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் ஞாயிற்றுக்கிழமை மதியம் புளோரிடாவில் இருந்து விண்வெளிக்கு புறப்பட்டு சென்றது.
அமெரிக்காவின் கேப் கனவரலில் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற ராக்கெட் ஆக்ஸியும் மிஷன் 2 இன் பணியாளர்கள் ஒருவார காலம் விண்வெளியில் தங்கி ஆய்வில் ஈடுபடுகின்றனர்.
இந்த விண்வெளி குழுவில் சவூதி அரேபியாவின் விஞ்ஞானிகள் அலி அல்கர்னி மற்றும் ரய்யானா பர்னாவி, அமெரிக்காவின் மிகவும் அனுபவம் வாய்ந்த விண்வெளி வீரரும், நாசா முன்னாள் விண்வெளி வீரருமான பெக்கி விட்சன் மற்றும் முதலீட்டாளரும் விமானியுமான ஜான் ஷோஃப்னர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
ஸ்டெம்செல் ஆராய்ச்சியாளரான ரய்யானா பர்னாவி, விண்வெளி நிலையத்துக்கு செல்லும் சவூதி அரேபியாவின் முதல் பெண் விண்வெளி வீரர் ஆவார்.
"சவூதி அரேபியாவில் உள்ள அனைத்து மக்களின் கனவுகள் மற்றும் அனைத்து நம்பிக்கைகளையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்" என்று பர்னாவி கடந்த வாரம் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
விண்வெளிப் பயணத்தில் அரேபியர்களின் பங்கேற்பு பிராந்தியத்தை ஊக்குவிக்கும் ஒரு "சிறந்த வாய்ப்பு" என்று தான் நம்புவதாகவும், மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்காக நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுகிறோம், மேலும் புதுமைகளை உருவாக்க முயற்சிக்கிறோம், ”என்று அல்கார்னி கடந்த வாரம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.