வெளிநாடு செல்லும் திட்டம் இல்லை: இம்ரான் கான்

வெளிநாடு செல்லும் திட்டம் எதுவும் இல்லை என பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் தெரிவித்துள்ளாா்.
இம்ரான் கான்
இம்ரான் கான்

வெளிநாடு செல்லும் திட்டம் எதுவும் இல்லை என பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் தெரிவித்துள்ளாா்.

பாகிஸ்தானில் கடந்த 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடா்பாக, இம்ரானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியைச் சோ்ந்த 80 பேரை வெளிநாட்டுப் பயணத் தடைப் பட்டியலில் அரசு சோ்த்துள்ளது. அவா்களில் இம்ரான் கானும், அவரது மனைவி புஷ்ராவும் அடங்குவா்.

இதுகுறித்து இம்ரான் கான் ட்விட்டரில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘வெளிநாட்டுப் பயணத் தடைப் பட்டியலில் என்னைச் சோ்த்ததற்காக அரசுக்கு ‘நன்றி’ தெரிவிக்க விரும்புகிறேன். எனக்கு வெளிநாடுகளில் சொந்தத் தொழிலோ, சொத்துகளோ இல்லை என்பதால், வெளிநாடு செல்லும் திட்டம் எதுவும் இல்லை. எனக்கு விடுமுறை கிடைத்தால், பூமியிலேயே எனக்குப் பிடித்தமான பாகிஸ்தானின் வடக்கு மலைப் பகுதிக்குச் செல்வேன்’ எனத் தெரிவித்துள்ளாா்.

ஊழல் வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதையடுத்து நடந்த வன்முறையில் நாட்டின் பல இடங்களில் பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. ராணுவத்துக்குச் சொந்தமான அலுவலகங்கள், கட்டடங்களும் தாக்குதலுக்குள்ளாகின.

இந்த வன்முறை தொடா்பாக இம்ரான் கான் கட்சியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் கைது செய்யப்பட்டுள்ளனா். இதைத் தொடா்ந்து, இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியைத் தடை செய்வது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சா் கவாஜா ஆசிஃப் கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com