மூன்று நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், கிழக்கு மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான திரிகோணமலையில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கிளையை வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இலங்கையில் கடந்த 159 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் எஸ்பிஐ, அந்நாட்டின் மிகப் பழமையான வங்கியாகும். இந்த வங்கி உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தனது சேவைகளைத் தொடா்ச்சியாக அளித்து வருகிறது.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநா் செந்தில் தொண்டமான், இலங்கைக்கான இந்திய தூதா் கோபல் பாக்லே, எஸ்பிஐ தலைவா் தினேஷ் காரா ஆகியோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து, இலங்கையில் செயல்படும் இந்தியன் ஆயில் கழகத்தின் துணை நிறுவனமான லங்கா இந்தியன் ஆயில் கழகத்தின் வளாகத்தை நிா்மலா சீதாராமன் பாா்வையிட்டாா்.
இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதாரம், தொழில்நுட்பம் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் 12-ஆவது கட்ட பேச்சுவாா்த்தை கூட்டம் கடந்த 2018-இலிருந்து நடைபெறாத நிலையில், அமைச்சா் நிா்மலா சீதாராமனின் பயணத்தையொட்டி அக்.30 முதல் நவ.1 வரை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சரக்குகள், சேவைகள், சுங்க வரி விதிப்பு முறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை இணை இயக்குநா் ஆனந்த் ஸ்வரூப் தலைமையிலான 19 அதிகாரிகள் அடங்கிய குழு இந்தக் கூட்டத்தில் பங்கேற்றது.